இதுதான் இந்தியா! வெறும் 25 நிமிடம்.. 9 இடங்களில் இறங்கி அடித்த ராணுவம்.. 70 தீவிரவாதிகள் காலி
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் எனப் பலரும் கூறி வந்த நிலையில், நள்ளிரவில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியது. தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து இப்போது சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் இந்தத் தாக்குதல் மூலம் தீவிரவாத கட்டமைப்பு அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் காஷ்மீர் அழகை ரசித்து வந்த 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குவதை நடத்திய தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது.

பிரதமர் மோடி
இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களில் இந்தியா இறங்கி அடிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தினர். அது தொடர்பாகப் பிரதமர் மோடியும் முப்படைகளின் தளபதிகள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வந்தார்.
தாக்குதல்
இந்தச் சூழலில் தான் நள்ளிரவில் இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது இறங்கி அடித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள 4 இடங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்கள் குறிவைக்கப்பட்டன. இதற்கிடையே இந்தத் தாக்குதல் தொடர்பாகச் சில கூடுதல் தகவல் வெளியாகியுள்ளன.
வெறும் 25 நிமிடங்கள்
அதாவது பக்காவாக திட்டமிட்டுத் தாக்குதலை ஆரம்பித்த இந்திய ராணுவம் வெறும் 25 நிமிடங்களில் ஒட்டுமொத்தத் தாக்குதலையும் நடத்தி முடித்துள்ளன. இதற்குள் எல்லாத் தாக்குதலையும் கன கச்சிதமாக நடத்தி முடித்துள்ளது. அதிலும் பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 70- 80 தீவிவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோட்டையான பஹாவல்பூர் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் இரு பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு இடத்திலும் 25-30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். துல்லியமாக எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்கள்
- மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் - ஜெய்ஸ்-இ-முகமது
- மார்கஸ் தைபா, முரிட்கே - லஷ்கர்-இ-தொய்பா
- மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா -லஷ்கர் இ தொய்பா
- மர்கஸ் அப்பாஸ், கோட்லி - ஜெய்ஸ் இ முகமது
- மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி - ஹிஸ்புல் முஜாஹிதீன்
- ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் - லஷ்கர் இ தொய்பா
- சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் - ஜெய்ஸ் இ முகமது
- சர்ஜால், தெஹ்ரா கலான் -ஜெய்ஸ் இ முகமது
- மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் - ஹிஸ்புல் முஜாஹிதீன்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. அதுவும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைக்காமல் தீவிரவாதிகளின் புகலிடங்களை மட்டுமே காலி செய்யும் வகையில் இந்தியா மிகத் துல்லியமாக இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications