நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு மேலும் 36 நீதிபதிகள் சப்போர்ட்.. இம்பீச்மென்ட் நடவடிக்கைக்கு கண்டனம்
டெல்லி: மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் இம்பீச்மென்ட் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 36 முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இத்தகைய முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் வழக்கமாக ஆண்டுதோறும் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார்கோவில் அருகே உள்ள தீபத்தூணிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
{image-grswaminathan5-1766249058.jpg tamil.oneindia.com
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன்
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறி, காவல்துறை மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க மறுத்தது. மேலும், திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு பரபரப்பான சூழல் உண்டானது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்பதால் தனியாக அவமதிப்பு வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதேபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இம்பீச்மென்ட் நோட்டீஸ்
இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சமூக மற்றும் மத விவகாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்ப்புகளை தொடர்ந்து வழங்கி வருவதாகம், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பிக்கள் சார்பில் இம்பீச்மென்ட் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.
ஆரம்பத்திலேயே நிராகரிக்கனும்
இந்த நிலையில் தான் இந்தியா கூட்டணி எம்பிக்களின் இந்த பதவி நீக்க முயற்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் மூத்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 154 வழக்கறிஞர்கள், நீதிபதி சுவாமிநாதன் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என லோக்சபா தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதேபோன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி, நீதித்துறை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல். நீதித்துறையை பாதுகாக்க உடனடியாக தலையிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இளம் வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
இந்த நிலையில் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 36 முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் இந்தியா கூட்டணி எம்பிக்கள் கொண்டு வர முயற்சிக்கும் இம்பீச்மெண்ட் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் கொண்டுவர முயற்சிக்கும் இம்பீச்மென்ட் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் என்றும், இத்தகைய முயற்சி அனுமதிக்கப்பட்டால், அது ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் அடித்தளத்தையே அசைத்துவிடும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications