மதக்கலவரம், பெட்ரோல், வேலையின்மை... இலங்கை நிலையே இந்தியாவிலும்.. டேட்டாவுடன் ராகுல் காந்தி ஆதங்கம்
டெல்லி: மதக்கலவரங்கள், பெட்ரோல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டத்தில் இலங்கையின் நிலையே இந்தியாவில் தொடர்ந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.
ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்
தவறான பொருளாதார கொள்கை
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட பணம் இன்றி அந்நாட்டு அரசு தத்தளித்து வருகிறது.
பணமின்றி தவிக்கும் இலங்கை
மேலும் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்க உலக நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையையும் வழங்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் அந்நிய செலாவணி மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 70 சதவீதத்துக்கும் மேல் குறைந்துவிட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாடு தடுமாறி வருகிறது.
ராகுல் காந்தி
இப்படி கடும் நெருக்கடியால் உள்நாட்டு கலவரங்களை சந்தித்து வரும் இலங்கையோடு இந்தியாவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் ஒப்பிட்டு இருக்கிறார், மதக்கலவரங்கள், பெட்ரோல் விலை, வேலையில்லா திண்டாட்டம் என்ற மூன்று விவகாரங்களில் இருநாடுகளை ஒப்பிட்டு கிராஃப் ஒன்றையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். மக்களை திசைதிருப்புவதன் மூலம் உண்மைகளை மாற்ற முடியாது என தெரிவித்துள்ள அவர், இந்தியாவும் இலங்கைபோன்றுதான் இருக்கிறது என்றார்.
பெட்ரோல், வேலையில்லா திண்டாட்டம்
இலங்கையில் 2017 ஆம் ஆண்டு மிகக்குறைவாக இருந்த வேலையில்லா திட்டம், 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இதே 2017 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து 2020 ஆம் ஆண்டு வேலையில்லா திண்டாட்டம் இலங்கை அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. பெட்ரோல் விலையையும், கடந்த 2017 ஆம் ஆண்டுமுதல் படிப்படியாக உயர்ந்து 2019 ஆம் ஆண்டு மெல்ல குறைந்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இலங்கையிலும் 2017-ல் வேகமாக உயர்ந்து பெட்ரோல் விலை தற்போது புதிய உயரத்தை அடைந்துள்ளது.
மதக் கலவரங்கள்
மதக் கலவரங்களை பொறுத்தவரை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்துள்ளது. அது படிப்படியாக 2019 ஆண்டு குறைந்தது. ஆனால், 2020 ஆம் ஆண்டு அது பன்மடங்கு அதிகரித்து உச்சநிலையை தொட்டது. இலங்கையில் 2017 ஆம் ஆண்டு முதல் உயரத் தொடங்கிய மதக் கலவரங்களின் எண்ணிக்கை 2019ல் உச்சம் தொட்டு 2020 ல் சரிந்தது. ஆனால், 2021 ஆம் ஆண்டு அது மேலும் அதிகரித்துள்ளது.