உலக பத்திரிகை சுதந்திர குறியீடு.. பாகிஸ்தானை விட மோசமான இடத்தில் இந்தியா! டாப் 10 நாடுகள் எவை
டெல்லி: உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பாகிஸ்தானை விட மோசமான நிலையாகும்.
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை வெளியிடும். இதில் ஒவ்வொரு நாட்டிலும் பத்திரிக்கை சுதந்திரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை வைத்து இந்த பட்டியலை ரிலீஸ் செய்வார்கள்.

இந்தாண்டிற்கான லிஸ்டில் மொத்தம் 180 நாடுகள் இருக்கும் நிலையில், அதில் இந்தியா 159ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு இந்தியா 161ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு இரண்டு இடங்கள் முன்னேறி இருக்கிறது.
பாகிஸ்தானை விட மோசம்: அதேநேரம் பாகிஸ்தானை விடவும் கூட இந்தியா கீழே இருக்கிறது என்பதே உண்மை. இந்தியாவை விட 7 இடங்கள் முன்னால் 152ஆவது இடத்தில் பாகிஸ்தான் இருக்கிறது. கடந்தாண்டு பாகிஸ்தான் 150ஆவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த லிஸ்டில் நார்வே 91% முதலிடத்தில் இருக்கிறது. டென்மார்க் 89% உடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில், ஸ்வீடன் 88% மூன்றாவது இடத்திலும் நெதர்லாந்து 87% உடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. தொடர்ந்து பின்லாந்து (86%), எஸ்டோனியா (86%), போர்ச்சுகல் (85%), அயர்லாந்து (85%), சுவிட்சர்லாந்து (84%), ஜெர்மனி (83%) ஆகிய நாடுகள் டாப் 10 இடங்களில் வந்துள்ளது. இந்த ரேங்கில் அமெரிக்கா கூட 55ஆவது இடத்தில் தான் இருக்கிறது.
இந்தியா குறித்து என்ன சொல்ல இருக்கிறார்கள்: இந்த லிஸ்டில் தான் இந்தியா 159ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியால் ஆளப்படும் உலகின் மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று வரை ஒன்பது பத்திரிகையாளர்கள் மற்றும் ஒரு ஊடகவியலாளர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த ஜனவரி முதல் நாட்டில் எந்த ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது..
பிராந்தியம் வாரியாக: பிராந்தியம் வாரியாக பார்க்கும் போது ஐரோப்பிய மிகச் சிறந்த இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆசியா-பசிபிக் பிராந்தியம் என்பது தான் பத்திரிக்கை பணியைச் செய்ய உலகின் இரண்டாவது கடினமான பகுதியாகக் குறிப்பிட்டுள்ளனர். செய்தியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான பத்து நாடுகளில் ஐந்து நாடுகள் இந்த ஆசியா பசிபிக் பகுதியில் தான் இருக்கிறது.
மியான்மர் (171வது), சீனா (172வது), வட கொரியா (177வது), வியட்நாம் (174வது) மற்றும் ஆப்கானிஸ்தான் (178வது) மோசமான நாடுகள் லிஸ்டில் இருக்கிறது. அதேநேரம் இந்த பிராந்தியத்தில் எந்தவொரு நாடும் டாப் 15 ரேங்கிங்கில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆபத்தான நாடுகள்: மேலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில், கிட்டத்தட்ட பாதி நாடுகளில் நிலைமை மிகவும் தீவிரமானதாக இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஏமன், சவுதி அரேபியா, ஈரான், பாலஸ்தீனம், ஈராக், பஹ்ரைன், சிரியா மற்றும் எகிப்து ஆகிய எட்டு நாடுகளுடன் ஐக்கிய அமீரகம் இப்போது ரெட் ஜோனில் இணைந்துள்ளது.
பத்திரிக்கை பணி செய்ய மிகவும் ஆபத்தான நாடாகக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எரித்திரியா இருக்கிறது. அதேபோல ஈரான் (176 ரேங்க்), வட கொரியா (177 ரேங்க்), ஆப்கானிஸ்தான் (178 ரேங்க்), சிரியா (179 ரேங்க்) ஆகியவை மோசமான நாடுகளாக உள்ளன.












Click it and Unblock the Notifications