இந்தியாவில் 33,376 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு - 308 பேர் மரணம்
இந்தியாவில் புதிதாக 33,376 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. 308 பேர் மரணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கொரோனா பாதிப்பு 34,973 ஆக இருந்த நிலையில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய தொடங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கேரளாவில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 3,32,08,330 பேராக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 32,198 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவிலிருந்து 3,23,74,497 பேர் மீண்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 3,91,516 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 308 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,42,317 ஆக அதிகரித்துள்ளது. நேற்று கொரோனா பலி எண்ணிக்கை 260 ஆக இருந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 65,27,175 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ள நிலையில் இதுவரை 73,05,89,688 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து 30 ஆயிரத்தைக் கடந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாகச் சற்று குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 25,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலுடன், நிபா வைரசும் பரவ தொடங்கியுள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகிய இரு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதேபோல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4 முதல் வகுப்புகள் தொடங்கும் என்று அறிவித்துள்ள பினராயி விஜயன், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் முக்கியம் என்பதால், ஆசிரியர்கள் இந்த வாரத்திற்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கேரளாவில் கொரோனா உடன் நிபா வைரஸ் பரவி வருவதால் அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரளாவில் இருந்து கர்நாடகா வருபவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், கேரளாவில் இருந்து வருபவர்களை கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கர்நாடக அரசு காய்ச்சல், மனநிலை, தீவிரமான சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல், இருமல், வாந்தி பேதி, உடல் வலி, மூளைக்காய்ச்சல் ஆகிய பிரச்சினைகள் உள்ளதா என்பதை சோதனை செய்ய வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து உரிய பாதுகாப்புடன் ரத்த மாதிரிகளை சேகரித்து புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அக்டோபர் மாதம் இறுதி வரை கேரளா பயணங்களை மக்கள் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 3வது அலை அக்டோபர் மாதம் கடுமையாக நாடு முழுக்க பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்றும், குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் நிபுணர் குழு, பிரதமருக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் நடைபெறும் காலமாகும். எனவே பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் இன்றி பங்கேற்க வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே ஆயுதம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications