புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி!
டெல்லி: சேவைத் துறையின் வலுவான செயல்பாட்டால், 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை தாண்டி மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்ந்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வலுவான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நாட்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இந்திய பொருளாதாரம்
சந்தை ஆய்வாளர்கள் கணித்திருந்த வளர்ச்சியை விட இது அதிகமாக இருப்பதால் பொருளாதார வட்டாரங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பு ரூ.81.40 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது ரூ.87.77 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் கணிசமாக விரிவடைந்துள்ளன என்பது தெளிவாகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சேவைத் துறை குறிப்பிடப்படுகிறது.
சேவைத் துறை வளர்ச்சி
தகவல் தொழில்நுட்பம், வங்கி மற்றும் நிதி சேவைகள், காப்பீடு, வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதன் தாக்கமே நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் பிரதிபலித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், 2025-26 முழு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதமும் 7.7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
ஜிடிபி வளர்ச்சி
முழு நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி ரூ.323.12 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.299.89 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போதைய மதிப்பீடு நாட்டின் பொருளாதார வலிமையை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
மேலும், உத்தேச ஜிடிபி 8.9 சதவீதம் உயர்ந்து ரூ.346.36 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது முதலீடுகள், உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
பொருளாதார சுனாமி
இந்த வளர்ச்சி புள்ளிவிவரங்கள் அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பொருளாதாரம் கடுமையான சவால்களை சந்திக்கும் என்றும், எதிர்காலத்தில் "பொருளாதார சுனாமி" ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஜிடிபி வளர்ச்சி தரவுகளை மேற்கோள் காட்டி பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சி
இந்திய பொருளாதாரம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக தொடர்ந்து திகழ்கிறது என்றும், சேவைத் துறை, உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் உள்நாட்டு நுகர்வு ஆகியவை வளர்ச்சியை முன்னெடுத்து செல்கின்றன என்றும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. எனினும், எதிர்காலத்தில் உலக பொருளாதார சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை, சர்வதேச வர்த்தக நிலைமைகள் மற்றும் பருவமழை போன்ற காரணிகள் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி
இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, 7.8 சதவீத ஜிடிபி வளர்ச்சி இந்திய பொருளாதாரத்திற்கு உற்சாகமான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. சேவைத் துறையின் வலிமை மற்றும் உள்நாட்டு பொருளாதார செயல்பாடுகளின் வளர்ச்சி, இந்தியா தொடர்ந்து உயர்ந்த வளர்ச்சி பாதையில் பயணித்து வருவதை இந்த புள்ளிவிவரங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications