8 ஆண்டுகளாக செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில்.. முடிவுக்கு வந்தது மங்கள்யான் விண்கலத்தின் பயணம்!
டெல்லி: இந்திய விண்வெளித்துறையில் மைல் கல்லாக கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய்கிரக சுற்றுப் பாதையில் வலம் வந்து கொண்டிருந்த மங்கள்யான் விண்கலம் தமது பயணத்தை நிறைவுசெய்துவிட்டது.
இஸ்ரோ எனப்படுகிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த 2013-ல் விண்வெளித்துறையின் உச்சத்தை தொட்டது. ரூ450 கோடி செலவில் மங்கள்யான் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. மங்கள்யான் விண்கலத்தை பிஎஸ்எல்வி-25 ராக்கெட் விண்ணுக்கு சுமந்து சென்றது. இதில் 15 கிலோ எடை கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, அதன் மீது படிந்துள்ள தாதுக்கள் மற்றும் மீத்தேன் குறித்து ஆய்வு மேற்கொள்ள மங்கள்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை அடைந்த 4-வது விண்கலம் என்ற பெருமைக்குரியது நமது மங்கள்யான்.
மங்கள்யான் விண்கலமானது 2014-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. மங்கள்யான் விண்கலம் பல்வேறு தகவல்களையும் தொடர்ந்து அனுப்பி வந்தது. இதனால் மங்கள்யானுக்கு அடுத்தடுத்த விண்கலத்தை அனுப்புகிற முயற்சிகளையும் இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் படம் எடுத்து அனுப்பி இருந்தது. செவ்வாய் கோளில் இருந்து 7,200 கி. மீட்டர் தொலைவிலும், சந்திரனிடமிருந்து 4,200 கி. மீட்டர் தொலைவிலும் இருப்பது போபோஸ். இந்த போபோஸ், விண்கற்களால் உருவானது; இதில் தண்ணீர் இருக்கிறது; விண்கற்கள் மோதலில் இருந்து இது உருவாகி இருக்கலாம் எனவும் கருதப்பட்டது.
இதனிடையே மங்கள்யான் விண்கலத்துடனான தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. விண்வெளியில் அண்மையில் உருவான மிக நீண்ட கிரகணம் ஒன்றால் மங்கள்யான் விண்கலத்தின் எரிபொருள் தீர்ந்து போயிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் மங்கள்யான் விண்கலத்துடனான அனைத்து தொடர்புகளும் இல்லாமல் போய்விட்டது.
இதனால் கடந்த 8 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு தகவல்களை அனுப்பி வந்த மங்கள்யானின் விண்வெளிப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இஸ்ரோ நிறுவனம் விரைவில் வெளியிடும் என்பது எதிர்பார்ப்பு.
வாவ்...இவ்ளோ அழகா செவ்வாய் கிரகம்? - 3டி புகைப்படங்களை அனுப்பி வியக்க வைத்த மங்கள்யான்!