முடங்கும் எலக்ட்ரானிக் துறை! அமெரிக்கா-சீனா மோதலால் இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் வேலையின்மை
டெல்லி: ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் துறைகளுக்கு 'ரேர் எர்த் மெட்டீரியல்' எனப்படும், பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் அரிய கனிமங்கள் மிகவும் முக்கியம். ஆனால் இந்த கனிமங்களின் சப்ளையை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலையின்மை உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் அரிய கனிமங்கள் கிடைத்தாலும், அதை மண்ணிலிருந்து பிரித்தெடுப்பது தலைவலி பிடித்த வேலை. செலவும் கூடுதலாகும். இதற்கான டெக்னாலஜி அமெரிக்காவிடம் கூட போதுமான அளவில் கிடையாது. ஆனால், சீனா இந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறது. சர்வதேச அளவில் சப்ளை ஆகும் அரிய கனிமங்களில் 90% சதவிகிதம் சீனாவிலிருந்துதான் போகிறது.

ஏதாவது ஒரு நாடு வளர்கிறது என்றால்தான் அமெரிக்காவுக்கு கண்ணு பொறுக்காதே! எனவே வரி (Tariff) என்கிற பெயரில், அமெரிக்கா நடுவில் புகுந்து ஏழரையை கிளப்பிவிட்டதால், கனிமங்களை சப்ளை செய்ய சீனா நிறுத்தி வைத்துவிட்டது.
இது இந்தியாவில் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. நாம் பல நாடுகளுக்கு டிவி, மொபைல்போன், ஸ்பீக்கர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஐயிட்டங்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். அதேபோல கார், டிராக்டர், லாரியும் பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆனால், தற்போது இந்த ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் 'ரேர் எர்த் மெட்டிரியல்'தான்.
பல எலக்ட்ரானிக் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தியிருக்கின்றன. நேற்றுவரை இந்தியாவில் ஸ்பீக்கர்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இன்று சீனாவிலிருந்து ஸ்பீக்கர்களை உதிரியாக இறக்குமதி செய்து, அதை அசம்பிள் செய்து விற்கும் நிலைக்கு எலக்ட்ரானிக் நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன. இப்படி செய்வதன் மூலம் இந்த துறையில் ஏராளமாக வேலை இழப்புகள் ஏற்படும்.
நொய்டாவில் மட்டும் 5,000-6,000 பேர் நேரடியாகவும், கிட்டத்தட்ட 15,000 பேர் மறைமுகமாகவும் வேலையை இழக்கும் சூழலில் இருப்பதாக இந்திய மின்னணு தொழில்கள் சங்கம் (ELCINA) கூறியிருக்கிறது. சென்னை போன்ற தென்னிந்திய நகரங்களிலும் எலக்ட்ரானிக் நிறுவனங்கள் இயங்கி வருவதால், வேலையிழப்பு இங்கும் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தை இன்னும் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும் எனில், நாம் நியோடைமியம்-இரும்பு-போரான் (NdFeB) காந்தங்களை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்கள், SSD, மொபைல் போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல மின்னணு பொருட்களில் காந்தங்கள் இருக்கிறது. 1984க்கு முன்புவரை பழைய காந்தங்கள்தான் மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகுதான் தலைவன் NdFeB உள்ளே வருகிறான்.
NdFeB காந்தங்கள், பழைய காந்தங்களை விட வலிமையானது. அளிவில் சிறியதாக இருந்தாலும் அதிக ஆற்றல் திறன் கொண்டிருக்கும். 1984ல் இது கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மின்னணு தொழில்நுட்ப துறையில் புதிய புரட்சி ஏற்படுகிறது. இன்று நாம் பயன்படுத்தும் பல புதிய மின்னணு கருவிகள் உருவாக காரணமே தலைவன் NdFeBதான்.
பிரச்சனை என்னவெனில், இந்த NdFeB காந்தங்களை செய்ய, பூமியிலிருந்த தோண்டி எடுக்கப்படும் அரிய கணிமங்கள் தேவை. இதைத்தான் சீனா வைத்திருக்கிறதே! எனவே, நம்மால் சொந்தமாக இந்த காந்தகளை உருவாக்க முடியவில்லை. ஆகவே இந்த தொழில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications