கப்பல் மோதி நடுக்கடலில் தமிழக மீனவர் பலி: இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கடும் கண்டனம்!
டெல்லி: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் பலியானது மற்றும 2 மீனவர்கள் மாயமான சமபவம் தொடர்பாக இலங்கைக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. இலங்கை கடற்படை மோதியதால் மாயமான 2 தமிழ்நாட்டு மீனவர்களைத் தேடும் பணி தொடருகிறது.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையின் அட்டூழியமாக நீடித்து வருகிறது.

இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழ்நாட்டு மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து மத்திய அரசுக்கு பல்வேறு கடிதங்கள் மூலம் வலியுறுத்தியும் இலங்கை அரசின் அட்டூழியப் போக்கு முடிவுக்கும் வரவில்லை. தற்போதைய நிலையில் 80-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே பாரம்பரியமாக மீன்பிடிக்கும் உரிமை உள்ள பகுதியில் தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை கப்பல்கள் அங்கு ரோந்து வந்தன.
அப்போது, கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரமாக தாக்குதல் நடத்தத் தொடங்கி இருக்கிறது. மேலும் 4 மீனவர்களையும் கைது செய்யும் வகையில் அவர்களது மீன்பிடி படகு மீது ரோந்து கப்பல்களை மோதவிட்டுள்ளது இலங்கை கடற்படை. இதில் மீன்பிடி படகு சேதமடைந்து நடுக்கடலில் மூழ்கியது.
இந்த மீன்பிடி படகு கவிழ்ந்ததில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் கடலில் அப்படியே மூழ்கினர். இவர்களில் ஒருவரது உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 2 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இது ராமேஸ்வரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த படுபாதகச் செயலுக்கு தற்போது மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் வரவழைத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தமது கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications