ஈழப் பிரச்சனையில் மீண்டும் தலையிடும் இந்தியா.. டெல்லி வருகை தர தலைவர்களுக்கு மோடி அழைப்பு!
டெல்லி: இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்தியா மீண்டும் தலையிட தொடங்கியுள்ளது. கொழும்பில் தம்மை சந்தித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்களை டெல்லி வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை விடுதலை பெற்றது முதலே தொடங்கிய ஈழத் தமிழர் பிரச்சனை எத்தனையோ முகங்களை கொண்டதாக உருமாறிவிட்டது. ஆனால் பிரச்சனைக்குதான் தீர்வு காணப்படவே இல்லை.
1950களில்,60-களில் மலையகத் தமிழர் பிரச்சனை, பின்னர் ஈழத் தமிழர் பிரச்சனை... ஈழத் தமிழர் பிரச்சனையில் தந்தை செல்வா தலைமையில் அறவழிப் போராட்டம். பின்னர் பிரபாகரன் தலைமையில் ஆயுதப் போராட்டம்..

விடுதலைப் போர்
இந்த விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத செயல் என அறிவித்து அதை அழித்து ஒழித்தனர். 2009-ம் ஆண்டு ஈழ யுத்தம் முடிவுக்கு வந்த போதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காணப்படவே இல்லை.

13-வது பிரிவுக்கு எதிர்ப்பு
1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தமானது அரசியல் சாசனத்தின் 13-வது பிரிவின் கீழ் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறது. ஆனால் 13-வது பிரிவின் கீழ் தீர்வு காண்பது ஈழத் தமிழர் உரிமை போராட்டத்துக்கு முழு அர்த்தத்தைத் தராது என்கின்றனர் ஈழத் தமிழர் தலைவர்கள்.

கோரிக்கைகள் இவைதான்
தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்; நிலம் உள்ளிடவை தொடர்பான சிறப்பு அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் ஈழத் தமிழர்களின் தற்போதைய பிரதான கோரிக்கை. பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் போது இதைத்தான் வலியுறுத்த வேண்டும் எனவும் இதர தமிழ் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன.

கொழும்பில் மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில் பிரதமர் மோடியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கொழும்பில் இன்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைவரும் டெல்லிக்கு வாருங்கள் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்,

புதிய திருப்பமாக அமையும்?
தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் இந்திய அமைதிப்படைக்கான ஆலோசகராக இருந்தவர். இலங்கை பிரச்சனையின் அத்தனை அம்சங்களையும் அறிந்தவர். அதனால் ஈழத் தமிழர் பிரச்சனையில் புதிய வியூகத்துடன் அவர் செயல்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. இதனால்தான் ஈழத் தமிழர் தலைவர்களை டெல்லி வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications