இப்போ வலிக்குதா.. உத்தரகாண்ட் எல்லையில் அமெரிக்க ராணுவத்துடன் இந்தியா கூட்டு பயிற்சி.. சீனா குமுறல்
டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே அக்டோபர் மாதம் பிரமாண்ட ராணுவ பயிற்சி நடக்கவுள்ளது. இந்தியா, அமெரிக்கா நாடுகள் இணைந்து 'யுத் அப்யாஸ்' என்ற பெயரில் பிரமாண்ட ராணுவ பயிற்சிகளை நடத்தி வருகின்றன. கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யூத் அப்யாஸ் பயிற்சி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் யுத் அப்யாஸ் ராணுவ பயிற்சி, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடத்தப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் ஆலி பகுதியில் இப்பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் 31ம் தேதிவரை நடக்க உள்ளது. இதில் சிக்கலான எண்ணற்ற பயிற்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போர் விமானம், ராணுவ கப்பல்கள்! தைவானை சுற்றி வளைக்கும் சீனா.. கொம்பு சீவும் அமெரிக்கா! நடப்பது என்ன
இந்தியா - அமெரிக்கா ராணுவ பயிற்சி
இருநாடு ராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த பயிற்சி நடத்தப்படுகிறது. ஆனால் கிழக்கு லடாக்கில் இந்திய - சீனா படைகள் இடையே சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனா எதிர்ப்பு
இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ பயிற்சிக்கு சீனா கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இதுகுறித்து சீன செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எல்லைக்கு அருகில் நடைபெறும் இந்த ராணுவப் பயிற்சி டெல்லி மற்றும் பெய்ஜிங் இடையிலான ஒப்பந்தங்களை மீறுவதாக இருக்கிறது. சீனா - இந்தியா எல்லைப் பிரச்னையில் மூன்றாம் தரப்பு எந்த வடிவத்திலும் தலையிடுவதை நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்.
சீனா - இந்தியா ஒப்பந்தம்
தொடர்ந்து, சீனா-இந்தியா எல்லைப் பிரச்னை இரு நாடுகளுக்கு இடையேயான விஷயம். இரு நாடுகளில் தரப்பிலும் உயர்மட்ட பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சரியாக கையாள ஒப்புக்கொண்டன. 1993 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் சீனா - இந்தியா இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லைக் கட்டுபாட்டு பகுதிக்கு அருகில் இரு தரப்பிலும் இராணுவப் பயிற்சியை நடத்த அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அந்த ஒப்பந்தத்தை இந்தியா காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை
இதனைத்தொடர்ந்து, இந்திய வெளியுறத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி, இந்தியா - சீனா ஆகிய இரு நாடுகளும் கடந்த காலங்களில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் படி செயல்பட வேண்டும். இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ பயிற்சி முற்றிலும் வேறுபட்டது. இதில் மூன்றாம் தரப்பு என்று சீனா குறிப்பிடுவது ஏன் என்று புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பதற்றம்
ஏற்கனவே தைவான் விவகாரத்தில் அமெரிக்கா - சீனா இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. அதேபோல் 2020ம் ஆண்டு இந்திய ராணுவம் மீது சீனா ராணுவம் தாக்குதல் நடத்திய பின், இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இந்திய - சீன எல்லையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவுள்ளது கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.