சண்டைக்கு மத்தியில் இஷ்டத்துக்கு வதந்தி பரப்பிய பாகிஸ்தான்.. வரிசையாக அம்பலப்படுத்திய இந்திய ராணுவம்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது. இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளன. சண்டைக்கு மத்தியில் இந்திய ராணுவம் குறித்து பாகிஸ்தான் தரப்பில் பல்வேறு பொய்கள் பரப்பப்பட்டதாக இந்திய ராணுவம் அம்பலப்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது இந்தியா. இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பதற்ற சூழல்
கடந்த சில நாட்களாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.
இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளில் இரவு நேரத்தில்பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிய நிலையில், S-400 மற்றும் ஆகாஷ் போன்ற வான்வெளி கவச அமைப்புகளைப் பயன்படுத்தி இந்தியா அந்த தாக்குதலை முறியடித்தது.
சண்டை நிறுத்தம்
இந்த நிலையில், பாகிஸ்தான் இந்தியாவிடம் முதல்முறையாக இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக பேசியதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கடுமையான தாக்குதலை எதிர்கொண்ட நிலையில், இந்த தாக்குதல் மேலும் தீவிரமடைந்தால், பாகிஸ்தானில் பாதிப்புகளும் அதிகரிக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியாவிடம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வந்தது.
இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய இராணுவ ஜெனரலை அழைத்தார். அப்போது இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் தரைவழி, வான்வழி, கடல் வழி தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. இருநாடுகள் இடையேயான துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்வது என ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனை இருதரப்பிலும் உடனே செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
முப்படை அதிகாரிகள் பேட்டி
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பிறகு கமாண்டர் ரகு ஆர் நாயர், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாகிஸ்தான் பரப்பிய பொய்களை முப்படை அதிகாரிகள் அம்பலப்படுத்தினர்.
பாகிஸ்தான் பரப்பிய பொய்கள்
கர்னல் சோபியா குரேஷி கூறுகையில், "பாகிஸ்தான் தனது ஜேஎஃப் 17 மூலம் நமது எஸ்-400 மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறியது முற்றிலும் பொய்யானது. அதேபோல், சிர்சா, ஜம்மு, பதான்கோட், பட்டிண்டா, நலியா மற்றும் பூஜ் ஆகிய இடங்களில் உள்ள நமது விமான நிலையங்கள் சேதமடைந்ததாக தவறான பிரச்சாரத்தை பாகிஸ்தான் நடத்தியது. அந்த தவறான தகவல் பிரச்சாரம் முற்றிலும் தவறானது. மூன்றாவதாக, சண்டிகர் மற்றும் வியாஸில் உள்ள நமது வெடி மருந்து கிடங்குகள் சேதமடைந்ததாக பாகிஸ்தான் பிரச்சாரம் செய்தது. இதுவும் முற்றிலும் தவறானது.
இந்திய ராணுவம் மசூதிகளை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், நமது ராணுவம் இந்தியாவின் அரசியலமைப்பு மதிப்பின் மிக அழகான பிரதிபலிப்பு என்பதையும் நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன்" எனத் தெரிவித்தார்.
ஜோடிக்கப்பட்ட பொய்
விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், "இந்திய ஆயுதப் படைகள் மசூதிகளை குறிவைத்ததாக பாகிஸ்தான் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதையும், இந்திய ஆயுதப்படைகள் நமது அரசியலமைப்பு விழுமியங்களின் பிரதிபலிப்பு என்பதையும் மிகத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறோம்.
அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் நாங்கள் மிக உயர்ந்த மதிப்பில் கருதுகிறோம். எங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாத முகாம்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் வசதிகளை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளன. எந்த மதத் தலங்களையும் இந்திய ஆயுதப்படைகள் குறி வைக்கவில்லை.
முற்றிலும் பொய்
எங்கள் எஸ்-400 ஏவுகணை தளத்தை அழித்ததாக பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறானது. கடந்த சில நாட்களாக, பாகிஸ்தான் மிகவும் கடுமையான இழப்புகளைச் சந்தித்துள்ளது. அது நிலத்திலும் வான்வழியிலும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் முக்கியமான விமானத் தளங்களான ஸ்கர்டு, ஜகோபாபாத் மற்றும் போலாரி ஆகியவற்றில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications