"உக்ரைனில் உச்சமடையும் போர்.. எங்கும் செல்ல வேண்டாம்.." இந்திய மாணவர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சகம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Recommended Video
உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த போர் 4 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்ற படுவேகமாக ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே மோதல் உச்சமடைந்துள்ளது. இந்தச் சூழலில் பெலாரஸ் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்! 'டார்ச்சர்' செய்வதாக மாணவிகள் புகார்! பரபர வீடியோ
இந்திய மாணவர்கள்
இந்தச் சூழலில் உக்ரைன் நாட்டில் மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்திய மாணவர்கள் பலரும் போலாந்து, ருமேனியா எல்லை வழியாக அண்டை நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். ஆப்ரேஷன் கங்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இதுவரை 6 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
எங்கும் செல்ல வேண்டாம்
இதனிடையே போர் உச்சமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. சண்டைத் தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் இச்சூழலில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பின்னர், பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்த பின்னர் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள்
உக்ரைன் நாட்டில் இருந்து மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தில் கீழ் முதற்கட்டமாகக் கடந்த பிப்.26 ஆம் தேதி ருமேனியாவுக்கு 2 விமானங்களும், ஹங்கேரிக்கு ஒரு விமானமும் இயக்கப்பட்டன. அதேபோல நாளைய தினம் ருமேனியா, ஹங்கேரி நாடுகளில் இருந்து தலா ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது. இப்படி வரும் மார்ச் 2 வரை மட்டும் 7 விமானங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 5 விமானங்கள் ருமேனியாவில் இருந்தும் 2 விமானங்கள் ஹங்கேரியில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.
பெற்றோர்கள் கோரிக்கை
வரும் நாட்களில் போர் மேலும் உச்சமடையும் என அஞ்சப்படும் நிலையில், மாணவர்களை விரைவாக மீட்க வேண்டும் என இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இந்தியப் பிரதமர் மோடியிடம் உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்கள் உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும் கூட போலாந்து எல்லையில் உக்ரைன் வீரர்கள் இந்திய மாணவர்களை மோசமாக நடத்துவதாகப் புகார் எழுந்துள்ளது.