திடீரென தாக்கிய டிரோன்.. கப்பல் உள்ளே கதறும் இந்தியர்கள்.. அடுத்து இந்திய கடற்படை செய்த காரியம்
டெல்லி: இந்தியப் பணியாளர்களுடன் வரும் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், அதேபோல ஏடன் வளைகுடாவில் வந்த கப்பல் மீது இப்போது திடீரென டிரோன் தாக்குதல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல்கள் வணிக கப்பல்களை நோக்கியும் திரும்பியுள்ளன. ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.

இதைத் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
தாக்குதல்: இதற்கிடையே திடீரென ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏவுகணையால் தாக்கப்பட்ட அந்த வணிகக் கப்பல் ஆபத்திற்கான எஸ்ஓஎஸ் காலை பிறப்பித்த நிலையில், இந்தியா அதற்கு உதவிக்குச் சென்றுள்ளது. இந்தியக் கடற்படையின் டெஸ்ட்ராயர் கப்பல் அந்த வணிக கப்பலுக்கு உதவிக்குச் சென்றுள்ளது. அந்த வணிக கப்பலில் 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது வணிகக் கப்பலான மார்லின் லாண்டா மீது ஏவுகணை தாக்குதல் நடந்ததாக எஸ்ஓஎஸ் கால் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்குச் சென்றுள்ளது. அப்போது மார்லின் லாண்டா கப்பலில் தீ பற்றி எரிந்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வணிக கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகளில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஈடுபட்டுள்ளதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தியக் கடற்படை: இங்கு வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பதற்கும், கடல் வாழ் உயிரினங்களைக் காக்கவும் இந்தியக் கடற்படை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாகச் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது ஹவுதி குழு நடத்தும் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கடற்படைத் தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 18ஆம் தேதி இதே ஏடன் வளைகுடாவில் இந்தியப் பணியாளர்களுடன் ஒரு வணிகக் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதும் எஸ்ஓஎஸ் கால் வந்த நிலையில், ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் அங்கு விரைந்து உதவியது குறிப்பிடத்தக்கது.
கடந்த கால சம்பவங்கள்: கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்தியாவின் மேற்கே 21 இந்திய ஊழியர்களுடன் லைபீரியக் கொடியுடன் வந்த எம்வி கெம் புளூட்டோ ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த எம்பி கெம் புளூட்டோவைத் தவிர, இந்தியாவை நோக்கி வந்த மற்றொரு வணிக எண்ணெய் டேங்கர் கப்பலும் அதே நாளில் தெற்கு செங்கடலில் டிரோன் உள்ளானது. அந்த கப்பலில் 25 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், காசா பகுதியில் நடக்கும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹவுதி படை தாக்குதல்களை ஆரம்பித்தனர். இஸ்ரேல் கொடியுடன் வரும் கப்பல்களை மட்டுமே தாக்குவதாக ஹவுதி படை கூறினாலும் கூட உண்மையில் அனைத்து கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடப்பதாகவே உலக நாடுகள் குற்றஞ்சாட்டுகின்றன.












Click it and Unblock the Notifications