Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனிமேல் இந்திய தண்டனைச் சட்டம் கிடையாது.. லோக்சபாவில் நிறைவேறியது பாரதிய நியாய சன்ஹி,, இனி எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மத்திய அரசின் 3 புதிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று நிறைவேறியது. குற்றவியல் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதீய நியாயா, பாரதிய நகரிக் சுரக்ஷா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த நவம்பர் 12ம் தேதி அன்று, இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷ்யா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய புதிய சட்டங்களை சில திருத்தங்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டு வந்தார். இந்த சட்டம் குறித்து இன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Indian parliament Lok Sabha Passes Criminal Law Bills Seeking To Replace IPC, CrPC And Evidence Act

ஆனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (எம்பி) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் பெரிய அளவில் எதிர்க்கட்சி எம்பிகளின் விவாதங்கள் எழவில்லை.. இந்த சட்டங்கள் குறித்து எதிர்கட்சித் தலைவர்களான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் போன்றவர்கள் விரிவாக பேசினார்கள். மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் துறைகளால் நிகழும் அத்துமீறல்களில் இருந்து குடிமக்களுக்கான பாதுகாப்பு இல்லை என்று பேசினார்கள்.

எதிர்க்கட்சிகள் சில முக்கியமான விஷயங்கள் குறித்து ஆட்சேபனை தெரிவித்து விவாதித்த போதிலும், ஆளும் பாஜக உறுப்பினர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் புதிய மசோதாக்களை ஆதரித்தனர்.

இந்த மசோதாக்கள் குறித்து பிஜு ஜனதா தள எம்பி பர்த்ருஹரி மஹ்தாப் கூறும் போது, தற்போதுள்ள சட்டங்கள் பிரிட்டிஷ் கால குற்றவியல் சட்டங்கள் ஆகும். இந்த சட்டங்கள் தண்டனை மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டிருந்தாலும், இப்போது மத்திய அரசால் முன்மொழியப்பட்ட மசோதாக்கள் நவீன இந்தியாவின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப நீதி மற்றும் சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்றார்.

பெங்களூரு தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா கூறும் போது, மத்திய அரசு கொண்டு புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் குடிமக்களை குற்றவியல் நீதி அமைப்பின் மையமாக மாற்றும் முயற்சிதான் என்றும் மகுடமாக அல்ல என்றும் விளக்கினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் நாட்டை காலனி ஆதிக்ககத்தில் இருந்து (பிரிட்டீஸ் கால காலனி ஆதிக்கம்) நீக்குவதற்கான முயற்சியை நனைவாக்கி உள்ளது. நம் தேசம், நம் மக்கள், நம்மொழி என்ற வரிசையில், நமது சுயராஜ்ஜிய கனவுக்கான உண்மையான அர்த்தம் இப்போது நிறைவேறி உள்ளது என்றார். குற்றவாளிகளை சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுவதை முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராட்டினார்.

பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால், மூன்று மசோதாக்களும் மக்களவையில் கிட்டத்தட்ட எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டன. ஒரு சில எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தவிர,பெரிய அளவில் மசோதாவிற்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படவில்லை.. வெளிப்படையாக இல்லை. ஹைதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி இந்த சட்டங்கள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தினார். மத சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் போன்ற பிற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு எதிரான குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தவறான எண்ணங்கள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தினார். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் இருக்க அனுமதிக்கும் விதியைப் பற்றியும் தனது அச்சத்தை ஓவைசி வெளிப்படுத்தினார்.

புதிய சட்டங்கள் சிவில் உரிமைகளை மீறும் சாத்தியம் உள்ளதாகவும், டி.கே.பாசு வழிகாட்டுதல்களைச் சேர்க்கப்படவில்லை என்றும், மரணதண்டனைக் கைதிகள் சார்பில் கருணை மனு தாக்கல் செய்வதிலிருந்து மூன்றாம் தரப்பினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓவைசி கூறினார். பயங்கரவாதத்தை தண்டிக்கும் விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தேசத்துரோக குற்றத்தை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பது குறித்து ஓவைசி கேள்வி எழுப்பினார்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் விவாதத்தின் போது பேசுகையில், இந்த புதிய சட்டங்கள் போதிய சோதனைகள் மற்றும் சமநிலை இல்லாமல் காவல்துறைக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளன, இது அவர்களின் தன்னிச்சையான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று குற்றம் சாட்டினார். இத்தகைய தன்னிச்சையான அதிகாரங்கள் சுதந்திரம், ஜனநாயகம், கருத்து வேறுபாடு மற்றும் எதிர்ப்புகளுக்கு எதிரானது என்றார். அப்போது அவர், அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாததை சுட்டிக்காட்டி, "இதோ ஒரு உயிருள்ள உதாரணம்" இந்த சட்டம் தான் என்றார். இதேபோல், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கும் போது மசோதாக்கள் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும் எம்.பி சிம்ரஞ்சித் சிங் மான் வேண்டுகோள் விடுத்தார். அவர்கள் இல்லாத போது மசோதாக்களை விவாதிப்பது ஜனநாயக விரோத நடைமுறை என்று எதிர்ப்பும் தெரிவித்தார்.

முடிவாக மசோதாக்கள் குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ஷா, நமது இந்திய அரசியலமைப்பு கொள்கைகள் மற்றும் அறநெறிகளுக்கு இணங்க மசோதாக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் எதிர்கால தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மனதில் கொண்டும் இந்த குற்றவியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றார். மசோதாவின் முக்கிய விதிகளை சுட்டிக்காட்டி அமித்ஷா பேசினார். உதாரணமாக, பயங்கரவாதம் தொடர்பான விதிகள், பயங்கரவாதத்தை சகிப்புத்தன்மை இல்லாத கொள்கையில் அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், 'பயங்கரவாதம்' என்ற சொல் முதன்முறையாக இந்தியச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது என்பதை எடுத்துக்காட்டுவதாக கூறினார். இந்திய தண்டனைச் சட்டம் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை தண்டிக்கும் அதே வேளையில், பாரதீய நியாய சன்ஹிதா தேசத்திற்கு எதிராக செயல்படுபவர்களை மட்டுமே தண்டிக்கும் என்றார்

புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள், சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரங்களுக்கும் குடிமக்களின் உரிமைகளுக்கும் இடையே ஒரு சிறந்த சமநிலையைப் பேணுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் நலன்களை ஒரே மாதிரியாகப் பாதுகாப்பதற்காகவும் அமித்ஷா கூறினார்.

பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதாவைக் குறிப்பிட்டு அமித்ஷா பேசும் போது, குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் டிஜிட்டல் மற்றும் எலக்ட்ரானிக் ஆதாரங்கள் மற்றும் அதுபற்றிய செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்கி உள்ளோம் என்றார்.
நாம் நமது காலனித்துவம் மற்றும் அடிமைத்தனத்தின் அனைத்து அறிகுறிகளையும் அகற்றி, முற்றிலும் இந்திய குற்றவியல் சட்டங்களை உருவாக்க உள்ளோம். இந்த சட்டங்கள் இந்திய அரசியலமைப்பின் உணர்வை உள்ளடக்கியது என்றும் அமித்ஷா கூறினார்.

முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று குற்றவியல் சட்ட சீர்திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த வாரம் அறிமுகப்படுத்திய போது, அவை உள்துறை நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டன. கடந்த மாதம், குழு பல்வேறு மாற்றங்களை பரிந்துரைத்தது. சில திருத்தங்களையும் பரிந்துரைத்தது.. எடுத்துக்காட்டாக, விபச்சாரக் குற்றத்தை - 2018 ஆம் ஆண்டு அரசியல் சாசன பெஞ்ச் மூலம் மைல்கல் ஜோசப் ஷைன் தீர்ப்பில் அது பெண்களுக்குப் பாகுபாடு காட்டுவதாகவும், பாலின நிலைப்பாட்டை நிலைநிறுத்துவதாகவும் - பாரதிய நியாய சன்ஹிதாவில் மாற்றியமைக்கப்பட்ட பிறகு அதைத் தக்கவைக்குமாறு பரிந்துரை செய்தது. அதேபோல் பாலின நடுநிலையாக்கு. ஆண்கள், பைனரி அல்லாத நபர்கள் மற்றும் விலங்குகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை குற்றமாக்குவதற்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐப் போன்ற ஒரு விதியைத் தக்கவைக்கவும் உள்துறை குழு பரிந்துரைத்தது.

மேலும் விசாரணையின் போது ஆதாரமாக பெறப்பட்ட மின்னணு மற்றும் டிஜிட்டல் பதிவுகளை பாதுகாப்பாக கையாளவும் செயல்படுத்தவும் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதவில் ஒரு விதியை சேர்க்கும் பரிந்துரை செய்தது. முதல் பதினைந்து 15 நாட்களுக்கு அப்பால் போலீஸ் காவலை அனுமதிக்கும் ஷரத்தை விளக்குவதில் அதிக தெளிவை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் மற்றவை எதுவும் மாறவில்லை.. குற்றவியல் சட்டங்களான ஐபிசி, சிஆர்பிசி, ஐஇசி ஆகிய சட்டங்களுக்கு பதிலாக பாரதீய நியாயா, பாரதிய நகரிக் சுரக்ஷா, பாரதிய நகரிக் சுரக்ஷா 3 ஆகிய சட்டங்களும் இன்று பெரிய எதிர்ப்புகள் இன்றி நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+