இன்னும் ஒரே மாசம் தான்.. கலக்க போகுது வந்தே பாரத் ஸ்லீப்பர்.. முதலில் எந்த ரூட் தெரியுமா! பரபர தகவல்
டெல்லி: வந்தே பாரத் வெற்றியைத் தொடர்ந்து, வந்தே பாரத் ஸ்லீப்பர்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ள நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வந்தே பாரத் ரயில்களுக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பல புதிய ரூட்களில் வந்தே பாரத் சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அடுத்தகட்டமாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கிடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது..
வந்தே பாரத் ஸ்லீப்பர்: அதாவது 2024 மார்ச் மாதத்திற்குள் இந்திய ரயில்வே வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச்சுகளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வே வரும் மார்ச் மாதம் மொத்தமாக 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. தொடக்கத்தில் டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா உள்ளிட்ட முக்கிய ரூட்களில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இதற்கான சோதனை ஓட்டம் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப். 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாதாரண ரயில் பெட்டிகளை வந்தே பாரத் தரத்திற்கு மாற்ற நரேந்திர மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார். பயணிகளின் பாதுகாப்பு, வசதி மற்றும் வசதியை மேம்படுத்த 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்திற்கு மாற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
மிக வேகம்: இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இப்போது வந்தே பாரத் ரயில்களின் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இவை ராஜ்தானி ரயில்களை விட வேகமாக இருக்கும் என்றும் இதன் மூலம் நாம் அடைய வேண்டிய இலக்குகளை வேகமாக அடைய முடியும் என்றும் ரயில்வே துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.
முதற்கட்டமாக வந்தே பாரத் ரயில்களில் 16 முதல் 20 பெட்டிகள் இருக்கும் என்றும் அவை ஏசி மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைக் கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அவை அனைத்துமே ஸ்லீப்பர் கோச்களாக இருக்கும். இரவு நேரப் பயணத்தை முதன்மையாகக் கணக்கில் வைத்து வடிவமைக்கப்படும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது.
அதிகாரிகள் தகவல்: இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் ஒரே இரவில் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும். முதற்கட்டமாக டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா ரூட்களில் இயங்கும்.. ஏப்ரல் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என நினைக்கிறேன். ரயில்கள் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரெடியாகிறது. இவை பயண நேரத்தை இரண்டு மணிநேரம் வரை குறைக்கும், இவை தற்போது ஓடும் அனைத்து ரயில்களை விட வேகமானதாக இருக்கும்" என்றார்.
இப்போது முக்கி நகரங்களை இணைக்கும் வகையில் ஏற்கனவே பல ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முக்கிய நகரங்களையும் அதன் அருகே இருக்கும் இரண்டாம் கட்ட நகரங்களையும் இணைக்கும் வகையில் வந்தே பாரத் மெட்ரோ சேவைகளை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே ஆலோசித்து வருகிறது. இந்த மெட்ரோ ஸ்டைல் ரயில்களைப் பல முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications