ஓராண்டு....மறக்கத்தான் முடியுமா அந்த 'மக்கள் ஊரடங்கு' நாளை.. அதுவும் மாலையில் நடந்த கூத்துகளை!
டெல்லி: ஓராண்டுக்கு முன்னர் இதே மார்ச் 22-ந் தேதிதான் கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஒருநாள் சுய ஊரடங்கு அல்லது மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓராண்டுக்கு முன்னர் இந்தியாவில் முதல் உக்கிரத்தைக் காட்டியது. இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதியன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, கொரோனாவின் பாதிப்பில் இருந்து தடுத்துக் கொள்ள மக்கள் தங்களைத்தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; அதனால் மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு அல்லது ஜனதா (மக்கள்) ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஓராண்டாகிவிட்டது
இதையடுத்து கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதியன்று சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அறவே இல்லை; காவல்துறை, மருத்துவ துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அன்றாட பணிகளில் ஈடுபட்டிருப்போர் வழக்கமான பணிகளை மேற்கொண்டர். வீடுகளைவிட்டு வெளியே நடமாடியோரை காவல்துறை எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். பொதுவாக மக்கள் ஊரடங்கு அமைதியான முறையில் கடைபிடிக்கப்பட்டது.

மறக்க முடியாத கூத்துகள்
ஆனால் அன்றைய தினம் நடந்த கூத்துகளை நாம் அசைபோடுவதும் ஒரு முன்னெச்சரிக்கைதான். ஏனெனில் மார்ச் 22-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் இந்த மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அன்று அதிகாலையிலேயே இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் பெருமளவில் அலைமோதியது. இதனால் மக்கள் ஊரடங்கின் நோக்கம் கேள்விக்குறியானது. இதையடுத்து போலீசார் இறைச்சி கடைகளை இழுத்து மூடினர்.

நன்றி தெரிவிப்பு
தமிழகத்தில் அன்றைய தினம் பெருமளவில் மக்கள் கூடும் மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. மாலை 5 மணிவரை மக்கள் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அதாவது கரவொலி எழுப்பியோ, வீடுகளில் உள்ள பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்பியோ நன்றி தெரிவிக்கலாம் என்பது பிரதமர் மோடியின் அழைப்பு.

வட இந்தியாவில் ஊர்வலம்
இந்த அழைப்பை பெரும் கேலிக்கூத்தாக்கிவிட்டனர் பொதுமக்கள். கரவொலி எழுப்புகிறோம்; பாத்திரங்கள் மூலம் ஒலி எழுப்புகிறோம் என வட இந்திய மாநிலங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் ஊர்வலம் போனார்கள். ஒட்டுமொத்தமாக எதற்காக மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது என்கிற நோக்கத்தையே சிதைப்பதாக இத்தகைய கோமாளி கூத்துகளும் அரங்கேறின. இதன்பின்னர்தான் முழு அளவிலான லாக்டவுன் அமலானது. தேசம் இதுவரை கண்டிராத பேரவலத்தையும் பொருளாதார வீழ்ச்சியையும் எதிர்கொண்டது. பும்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மாண்டு போன கொடுந்துயரமும் நிகழ்ந்தது.












Click it and Unblock the Notifications