இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.. சுனிதா வில்லியம்ஸ்க்கு மோடி கடிதம்
டெல்லி: நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்த புட்ச் வில்மோர், பூமிக்கு திரும்ப இருக்கிறார்கள். 9 மாதங்கள் கழித்து நாளை பூமியில் கால் வைக்க உள்ள நிலையில், பிரதமர் மோடி, சுனிதா வில்லியம்ஸ்க்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு அவர்கள் பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளாறுகளை சரிசெய்ய முயன்றும் தோல்வியே ஏற்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் இருவரும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் 9 என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.
இந்த விண்கலனில்தான் சுனிதா மற்றும் வில்மோர் உள்ளிட்டோர் பூமிக்கு திரும்ப இருக்கிறார்கள். இந்திய நேரப்படி நாளை அதிகாலை டிராகன் விண்கலம் பூமியில் வந்து இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிராகன் விண்கலம் பூமிக்கு வந்து சேரும் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்கா மட்டும் இன்றி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவில் இந்த நிகழ்வு கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, நாளை காலை பூமிக்கு திரும்ப உள்ள சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மோடி அதில் கூறியிருப்பதாவது:-
இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். 1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொண்டுள்ளனர். நீங்கள் பூமி திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்ப்பதற்கு நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 1 ஆம் தேதி எழுதிய கடிதத்தின் நகலை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். சுனிதா வில்லியம்ஸ்சின் நலம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனை சந்தித்த போது விசாரித்ததாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications