சண்டை முடிஞ்சது ஓகே.. ஆனாலும் சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட வராது.. திட்டவட்டமாக மறுக்கும் இந்தியா!
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவின் பதிலடியால் நிலைகுலைந்த பாகிஸ்தான், மோதலை நிறுத்திக் கொள்ளலாம் எனக் கோரிக்கை வைக்கவே அதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதேநேரம் மோதல் ஆரம்பித்த போது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்த நிலையில், அந்த முடிவில் மாற்றம் இருக்காது என்றும் சிந்து நதி நீர் நிறுத்தி வைக்கப்பட்டது தொடரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவி மக்களைக் குறிவைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும். இந்தத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு இருந்ததாகச் சொல்லப்பட்டது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இதையடுத்து அப்போதே இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தான், அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரும் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதை அப்போதே பாகிஸ்தான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960ல் போடப்பட்டது தான் சிந்து நதி நீர் ஒப்பந்தம். சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகள், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் நிலையில், அதை நிர்வகிப்பதே இந்த ஒப்பந்தம் ஆகும். உலக வங்கி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது. பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக சிந்து மற்றும் அதன் துணை நதிகள் இருந்த நிலையில், அதைத் தடாலடியாக இந்தியா நிறுத்தி வைத்தது.
என்ன நடந்தது
கடந்த 65 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தம் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த காலங்களில் புல்வாமா மற்றும் உரி எனப் பல தாக்குதல்கள் நடந்த சமயத்திலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தம் நிறுத்தி வைக்கப்பட்டது இல்லை. இருப்பினும், அதில் ராணுவ வீரர்களைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், இந்த முறை அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.
முடிவுக்கு வந்த மோதல்
அதன் பிறகு கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக இந்தியாவின் வட மாநிலங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அந்த அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. மேலும், பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் போர் நிறுத்தம் வேண்டும் எனத் தூது கொடுத்தது. அதைத் தொடர்ந்தே போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஒப்புக்கொண்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவது தொடரும்
அதேநேரம் இந்தியா சண்டையை நிறுத்தம் செய்ய மட்டுமே ஒப்புக்கொண்டு இருக்கிறது. வேறு எந்த விஷயத்திற்கும் பேச்சுவார்த்தைக்கும் கூட ஒப்புக்கொள்ளவில்லை. இதன் மூலம் மோதல் முடிவுக்கு வந்தாலும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த முடிவில் மாற்றம் இருக்காது என்றும் அது நிறுத்தி வைக்கப்பட்டது தொடரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை இல்லை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவே தெரிகிறது. இதனால் பாகிஸ்தானால் வரும் காலங்களிலும் வாலாட்ட முடியாது.
இந்தியாவுக்கு முக்கியம்
இதில் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான லாபம் இருக்கிறது. அதாவது சிந்து நதி நீர் ஒப்பந்தம் இருந்த வரை அங்கு புனல் மின்நிலையம் உட்பட எந்தவொரு திட்டத்தையும் இந்தியாவால் செய்ய முடியவில்லை. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பாகிஸ்தான் வேண்டும் என்றே சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தி வந்தது. இனி அந்தச் சிக்கலும் இருக்காது. இந்தியா தேவையான உள்கட்டமைப்புகளை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் மேற்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications