யாருப்பா நீங்க.. செம ஐடியா! உங்கள நான் கண்டிப்பா மீட் பண்ணணும்! வியந்து பாராட்டிய ஆனந்த் மகேந்திரா
டெல்லி: இணையத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ள ஆனந்த மகேந்திரா தன்னை மிகவும் இம்பிரஸ் செய்த ஒன்றை மனதார பாராட்டி உள்ளார்.
இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா. இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கும் பெரும்பாலான வயல்களில் மகேந்திரா நிறுவனத்தின் டிராக்டர்களே ஆக்கிரமித்து இருக்கும்.
இப்போது விவசாயத்துறை சார்ந்த வாகனங்களைத் தாண்டி கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை உற்பத்தி செய்வதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல டெக் மகேந்திரா என்ற ஐடி நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்,

ஆனந்த் மகேந்திரா
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ள தொழிலதிபர்களில் ஒருவர் ஆனந்த் மகேந்திரா.. இவர் தனது மனதுக்குப் பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகக் கருத்துகளைக் கூறிவார். தனது மனதைக் கவரும் அனைத்து விஷயங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதை மனதார பாராட்டுவார். அவரது ட்வீட்களுக்கு இணையத்தில் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

மண்டபம்
இதனிடையே இப்போது அப்படியொரு விஷயத்தைத் தான் ஆனந்த் மகேந்திரா பாராட்டி உள்ளார். இந்த காலத்தில் எல்லாம் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மண்டபம் கிடைப்பதே மிவும் கஷ்டமாக உள்ளது. நல்ல நாட்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களும் பல மாதங்களுக்கு முன்பே புக் ஆகிவிடுகின்றன. அப்படியே கிடைத்தாலும் அவை நகருக்கு வெளியே எதோ ஒரு மூலையில் தான் கிடைக்கும்.

மொபைல் மண்டபம்
இதனிடையே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகப் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்து உள்ளனர். எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக் கூடிய மொபைல் திருமண மண்டபத்தை இவர்கள் உருவாக்கி உள்ளனர். மொத்தம் 40*30 என்ற அளவில் உள்ள இந்தத் திருமண மண்டபத்தில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை அமர முடியும். மிகவும் ஸ்டைலான டிசைன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மண்டபத்திற்கு ஏசி வசதி எல்லாம் கூட உள்ளது.

பாராட்டு
திருமணம் மட்டுமின்றி, பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்தில் நடத்தலாம். இந்த கான்செப்ட் தான் ஆனந்த் மகேந்திராவை பெரியளவில் கவர்ந்து விட்டது. 2 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, இதை மனதார பாராட்டியுள்ளார். தொலைதூரங்களிலும் இதன் மூலம் சேவை வழங்க முடியும் என்றும் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இது பெரியளவில் பயன் தரும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

சந்திக்க விரும்புகிறேன்
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகேந்திரா, "இந்த ஐடியாவை மிகச் சரியாகச் செயல்படுத்திய நபரை நான் சந்திக்க விரும்புகிறேன். இது மிகவும் ஆக்கப்பூர்வமானது. மற்றும் சிந்தனை மிக்கது. தொலைதூரப் பகுதிகளுக்கும் கூட மொபைல் மண்டபம் மூலம் சேவை வழங்க முடியும்.மேலும் இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது.. ஜனநெருக்கடி அதிகம் உள்ள இந்தியா போன்ற நாட்டில் இதற்காக நிரந்தர இடமும் தேவையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

பாராட்டு
ஆனந்த் மகேந்திரா மட்டுமின்றி பலரும் இதை மனதார பாராட்டி வருகின்றனர். இப்படி சில மொபைல் மண்டபங்கள் உருவாக்கப்பட்டால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு மண்டபத்தை எடுத்துச் செல்ல முடியும் என்றும் இதன் மூலம் பலரும் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications