இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள்..தவறான அட்ரஸ், செல்போன் எண் கொடுத்து எஸ்கேப்..தொற்று பரவும் அபாயம்!
டெல்லி: உருமாறிய கொரோனா அச்சுறுத்தும் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியவர்களில் சிலர் தவறான செல்போன் எண்கள், முகவரி ஆகியவற்றை கொடுத்ததால் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
அதிகபட்சமாக கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் லண்டனில் இருந்து வந்த பெரும்பாலான நபர்கள் அரசிடம் தகவல் தெரிவிக்காமல் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு கண்டுபிடிக்க முடியாதவர்களிடம் இருந்து பெரும்பாலானோருக்கு வெகு விரைவில் வைரஸ் பரவும் அபாய நிலை உள்ளதாக சுகாதாரத்துறையினர் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தவறான முகவரி, செல்போன் எண்
இது தொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:- இங்கிலாந்தில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். திரும்பி வந்தவர்களில் சிலர் தெளிவில்லாத முகவரிகள், செல்போன் எண்களை கொடுத்து உள்ளனர். சிலர் தங்ககளது இங்கிலாந்து செல்போன் எண்களை சமர்ப்பித்துள்ளனர்.

கண்டுபிடிப்பில் சிரமம்
இந்த எண்களில் அவர்களை தொடர்பு கொண்ட போதிலும், வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்ட போதிலும் அங்கு இருந்து எந்த பதிலும் வரவில்லை. இவர்கள் இந்தியாவில் வேறு எண்ணை பயன்படுத்துவதால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் நிலவுகிறது. பலர் தங்கள் முகவரிகளில் தங்கள் தங்கி இருக்கும் இடங்களைக் குறிப்பிட்டுள்ளனர், ஆனால் அதில் அந்த தொகுதிகள், அபார்ட்மெண்ட் எண், வீட்டு எண், தெரு குறித்த விவரங்கள் இல்லை. பலர் ஹோட்டல் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளதால் அவர்களை தேடுவதில் சிக்கல் நீடிக்கிறது.

கட்டாய சோதனை
இங்கிலாந்தில் டிசம்பர் 7-க்குப் பிறகு வருபவர்களுக்கு மட்டுமே கட்டாய சோதனை நடைபெறுகிறது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை இங்கிலாந்தில் இருந்து வந்தவர்கள் தற்போது வரை கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். டிசம்பர் 21 மற்றும் டிசம்பர் 22 ஆகிய தேதிகளில் நாட்டிற்கு வந்த அனைத்து பயணிகளும் கட்டாய ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதால், மத்திய அரசு டிசம்பர் 23 முதல் ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தியது.

செல்போன் ஸ்விட்ச் ஆப்
கடந்த வாரம் நவம்பர் முதல் இங்கிலாந்தில் இருந்து அதிகபட்ச பயணிகள் திரும்பிய கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பல நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இங்கிலாந்தில் இருந்து பஞ்சாபுக்கு திரும்பிய 3,500 பேரை காணவில்லை. கர்நாடகாவுக்கு திரும்பிய 2,406 பேரில் 570 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் உண்டு
இங்கிலாந்தில் இருந்து தெலுங்கானாவுக்கு வந்த 1,100 பேரில் 279 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. தமிழகத்திலும் லண்டனில் இருந்து வந்த சிலரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒடிசாவில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 21 வரை இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த 181 பேரில் 27 பேர் காணவில்லை. அவர்களில் சிலர் போலி தொலைபேசி எண்கள் அல்லது தெளிவற்ற முகவரிகளை கொடுத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் ஆறுதல்
உத்தரகண்டில், கடந்த மாதத்தில் திரும்பிய 227 பேரில் 20 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உ.பி.யில் டிசம்பர் 9 முதல் இங்கிலாந்தில் இருந்து 1,655 பேரில் 568 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இங்கிலாந்தில் இருந்து வந்த அனைவரும் தொடர்பில் உள்ளனர்.

மக்கள் உணர வேண்டும்
சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஒதுங்கி இருக்கும் மக்கள் அவர்களை மட்டுமின்றி, அவர்களை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கின்றனர். எனவே அவர்கள் தாமாக முன்வந்து அந்தந்த மாநில சுகாதார துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications