நபிகள் நாயகம் குறித்த அவதூறு: கொந்தளிக்கும் அரபு நாடுகள்.. இந்தியாவிடம் கேள்வி எழுப்பிய ஈரான் அரசு
டெல்லி: இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஈரான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் அப்தோல்லஹியனை சந்தித்த போது பாஜக தலைவர்கள் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து பேசிய சர்ச்சை கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, தொலைகாட்சி விவாத மேடையில் பேசிய போது முஸ்லீம்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை கூறியிருந்தார்.
இது அரபு நாடுகள் வரை கடும் கண்டனங்களுக்குள்ளானது. மேலும் இவரது கருத்தை டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நவீன் ஜிந்தால் ஆதரித்து பேசியிருந்தார்.
நபிகள் அவதூறு: திராவிட மாடல் தமிழகத்தைப் பார்த்து மத்திய பாஜக அரசு புரிந்துகொள்ளட்டும்: கி.வீரமணி
எதிர்ப்பு
இவர்களது கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் நவீன் ஜிந்தால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்டவைகளிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் இது போதாது இருவரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுக்கின்றன.
மும்பை போலீஸ்
இந்த நிலையில் நுபுர் சர்மாவுக்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இவர்களது பேச்சால் அரபு நாடுகள் கொந்தளித்து போயுள்ளன. பல இந்தியர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சராக அமீர் அப்தோல்லஹியன் கடந்த ஆண்டு பதவியேற்றார்.
Recommended Video
இந்தியாவுக்கு வருகை
அவர் முதல்முறையாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெயசங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில வர்த்தகம், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது.
அஜித் தோவால்
அஜித் தோவாலிடம் இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்ட போது பாஜக தலைவர்கள் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் மோசமாகவும் பேசியதால் மேற்கு ஆசிய நாடுகள் கொந்தளிப்பில் இருப்பது குறித்து பேசப்பட்டது. அப்போது அஜித் தோவால், இந்திய அரசும் அதன் அதிகாரிகளும் இறைத் தூதர் நபிகள் நாயகத்தின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள் என தெரிவித்தார். இந்த தகவலை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளார்.
ஜெய்சங்கர்
ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்வீட்டில் வர்த்தகம், சுகாதாரம், மக்களிடையே உள்ள நல்லுறவு உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தியதாக மட்டுமே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்தியா- ஈரானிடையே நீண்ட காலமாக உள்ள கலாச்சார உறவுகள் குறித்து அமீருடன் பிரதமர் மோடி பேசியதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.