அண்ணாமலைக்கு புதிய பதவி.. பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம்? குவியும் வாழ்த்து
டெல்லி: தமிழ்நாடு பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறி கர்நாடகாவின் மைசூர் மன்னர் வாரிசும், பாஜக எம்பியுமான யுதுவீர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்னும் பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் அண்ணாமலைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். சமீபத்தில் தான் அவர் பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2026 சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளது.

அண்ணாமலை மற்றும் அதிமுக தலைவர்கள் இடையே மோதல் இருந்த நிலையில் கூட்டணிக்காக அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது அண்ணாமலை தமிழக முன்னாள் பாஜக தலைவராக வலம் வருகிறார். கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதற்கிடையே தான் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.
அமித்ஷா இப்படி கூறியதை தொடர்ந்து பல்வேறு யூகங்கள் கிளம்பின. அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பொறுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு அவர் மத்திய அமைச்சராக்கப்படுகிறார். இது நடக்காவிட்டால் பாஜகவின் தேசிய இளைஞரணி தலைவர் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் பரவின. ஆனால் பாஜக மேலிடம் சார்பில் அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறி அந்த கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பாஜக தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி கர்நாடகாவில் மைசூர் மன்னர் வாரிசும், குடகு - மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான யதுவீர் உடையார் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அண்ணாமலைக்கு வாழ்த்துகள். இந்த முக்கிய பொறுப்பில் அவர் வெல்லவும், நாட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றவும் வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.
அதேபோல் யதுவீர் உடையாரை தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவரும், மாஜி எம்பியுமான தருண் விஜய், அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தருண் விஜய் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருக்கமான பந்தம் கொண்டவர். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வா இந்தி பத்திரிகையான பஞ்சஜன்யாவின் ஆசிரியராக 1986 முதல் 2008 வரை பொறுப்பு வகித்தவர். அதன்பிறகு ராஜ்யசபா எம்பியாக செயல்பட்டார்.
தருண் விஜய் திருக்குறள் மற்றும் திருவள்ளூவர் மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் திருக்குறளை மேற்கொள் காட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் ‛‛
‛‛இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்'' - (திருக்குறள் 517) என்னும் வள்ளுவர் குறளுக்கு பொருத்தமாக தேசிய தலைமையால் பாரதிய ஜனதா கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் அண்ணாமலை அண்ணா, உங்கள் தலைமைப்பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் இன்னொரு பதிவில், அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்த யதுவீர் உள்பட பிறரின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, ‛‛அவர் (அண்ணாமலை) நம் அனைவருக்கும் மிகவும் பிரியமானவர். மிகவும் பிரபலமானவர். சில நேரங்களில் நம் விருப்பங்கள் எதார்த்தத்தை விட வேகமாக நகரும். அது இங்க நடந்துள்ளது. எங்களின் அன்பான அண்ணா அண்ணாமலையின் தொடர் முன்னேற்றத்துக்கும், பெரிய பொறுப்புகளுக்கு தொடர்ந்து உயரவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அவர் மீதான எங்களின் அன்பும், மரியாதையும் மகத்தானது'' என்று கூறியுள்ளார்.
அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டு இருப்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலைக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications