"கர்நாடக கோட்டா?".. கேஎல் ராகுலுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கும் டிராவிட்? உண்மை காரணம் என்ன?
டெல்லி: இந்திய அணியில் 3 பார்மட்டுகளில் இருந்தும் கே எல் ராகுலை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. இவர் இந்திய அணியில் இருப்பதற்கே கர்நாடகா கோட்டாதான் காரணம் என்றும் ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் வங்கதேசத்தை எளிதாக வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து திணறிக்கொண்டு இருக்கிறது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 227-10 ரன்களை எடுத்தது. 73.5 ஓவர்கள் மட்டுமே பிடித்த வங்கதேசம் உமேஷ் 4 விக்கெட், அஸ்வின் 4 விக்கெட் எடுத்த காரணத்தால் சுருண்டது.
கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்?
இந்திய அணி
அதன்பின் இறங்கிய இந்திய அணியில் வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். ஆனாலும் ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நின்று நிதானமாக ஆடினார்கள். பண்ட் 93 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் 87 ரன்கள் எடுத்தார். இதனால் முதல் இன்னிங்சில் இந்திய அணி 314-10 ரன்கள் எடுத்தது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் 3 விக்கெட், அஸ்வின் 2 விக்கெட் எடுத்து அசத்தினர். இதனால் வங்கதேசம் 231-10 ரன்களுக்கு சுருண்டது.
பேட்டிங்
இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால் 45-4 ரன்கள் எடுத்து இந்திய அணி திணறிக்கொண்டு இருக்கிறது. 4வது நாள் ஆட்டமான இன்று இந்திய அணி 6 விக்கெட்டை இழக்கும் முன் 100 ரன்களை எடுக்க வேண்டும். இதில் முதல் இன்னிங்சில் ராகுல் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்த வருடம் முழுக்கவே எந்த பார்மட்டிலும் கே எல் ராகுல் சரியாக ஆடுவது இல்லை. டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ஆவரேஜ் வைத்து இருக்கும் தற்கால பேட்ஸ்மேன்களில் இவர்தான் முதலிடத்தில் உள்ளார்.
45 போட்டிகளுக்கு மேல்
அதாவது 45 போட்டிகளுக்கும் மேல் ஆடிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் குறைந்த ஆவரேஜ் 34.26, வைத்து இருக்கும் ஒரே வீரர் இவர்தான். 2, 10, 23, 22, 10, 12, 8, 10, 2 இதுதான் கடைசியாக 9 டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுல் எடுத்த ரன்கள். இப்படி ஒரு வீரருக்குத்தான் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. வாய்ப்பு வழங்குவதோடு இல்லாமல் இவருக்கு கேப்டன் பொறுப்பையும் இந்திய அணி வழங்குவதுதான் மிகப்பெரிய காமெடியாக உள்ளது.
கர்நாடகா
பிசிசிஐ அமைப்பில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களின் ராஜ்ஜியம் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார். ராகுல் டிராவிட் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இது போக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னியும் கர்நாடகாவை சேர்ந்தவர். இதனால்தான் அணியில் சரியாக ஆடாத கே. எல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவதாக புகார் உள்ளது. அவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக கேப்டன்சி செய்தது இல்லை. உள்ளூர் போட்டிகளிலும் கேப்டன்சி செய்தது இல்லை. ஆனாலும் அவருக்கு தொடர்ந்து அணியிலும் வாய்ப்பு வழங்கி வருகிறார்கள்.
கேப்டன்
இடைக்கால கேப்டனாகவும் அவரை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. அவர் கன்னடர் என்பதால் அவருக்கு அதிகம் வாய்ப்பு வழங்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களோ மயங்க் அகர்வால் நன்றாக ஆடியும் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். கருண் நாயர் முச்சதம் அடித்தும் அவரை அணியில் இருந்து நீக்கினார்கள். அவர்களும் கர்நாடக வீரர்கள்தான் . அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லையே? கே எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்க கர்நாடகா என்பது காரணமாக இருக்காது.. வேறு காரணம் இருக்கலாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.