சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கனுமாம்! விளம்பரத்திற்காக கேஸ் போடாதீங்க! உச்சநீதிமன்றம் காட்டம்
டெல்லி: சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், பள்ளி பாடங்களில் இம்மொழியை கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை திராவிட மாடல் திருப்பி அடித்து விரட்டியது:விடுதலை ராஜேந்திரன்
தேசிய மொழி சர்ச்சை
நாடு முழுவதும் அவ்வப்போது தேசிய மொழி குறித்த சர்ச்சைகள் மேலெழுந்து வருகின்றன. பாலிவுட் நட்சத்திரங்கள் தொடங்கி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வரை இது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோலதான் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில், அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி நாக்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றிய அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே சமஸ்கிருதம் குறித்து கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.
சமஸ்கிருத மொழி சர்ச்சை
"டாக்டர் அம்பேத்கர் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க விரும்பினார். அதற்கான திட்டத்தையும் தயார் செய்திருந்தார்" என்று பாப்டே கூறியிருந்தார். இதேபோல "சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டும் அல்ல அது ஒரு உணர்வு. சமஸ்கிருதத்தின் தோற்றம், நவீனம் மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றிற்கு ஆதாரம் தேவையில்லை" என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கெல்லாம் மேலாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமஸ்கிருதம் குறித்து கூறிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொதுநல வழக்கு
கடந்த சில தினங்களுக்கு முன்னர், "அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி சமஸ்கிருதம். இது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிவிட்டது" என்று சோம்நாத் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சமஸ்கிருதம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் வழக்கறிஞருமான கேஜி வன்சாரா பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில், "சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
வழக்கு தள்ளுபடி
இவ்வாறு உத்தரவிடுவதன் மூலம், நாட்டின் அலுவல் மொழியாக இருக்கும் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மொழிகளுக்கு இது எந்த இடையூற்றையும் ஏற்படுத்தாது என்றும் மனுவில் கேஜி வன்சாரா கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம்தான், நீதிமன்றம் அல்ல என்றும் கூறியுள்ளனர். "இது கொள்கை சார்ந்த விஷயம் அதை எங்களால் மாற்ற முடியாது. உங்கள் விளம்பரத்திற்காக எங்களால் மனுவை விசாரிக்க முடியாது" என்றும் காட்டமாக கூறியுள்ளனர்.