கர்நாடக மதப் பிரச்சனைகளால் தமிழ்நாட்டுக்கு மூட்டை கட்டும் ஐடி நிறுவனங்கள் - நிதியமைச்சர் பிடிஆர்
டெல்லி: தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பே மதங்கள் ஜனநாயகமாகிவிட்டதாகவும், அதை இந்துத்துவ மண்ணாக மாற்றவே முடியாது எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தி தனது அதிகாரத்தை அதிகரித்து இருப்பது நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு கர்நாடகாவில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவீதங்களையும் தொடர்ந்து கவனித்து வருகிறது.

கர்நாடக மதப்பிரச்சனைகளால் தமிழகத்தை விரும்பும் நிறுவனங்கள்
அங்கு நடக்கும் மத ரீதியிலான பிரச்சனைகளால் ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளன. தமிழ்நாட்டு இந்துத்துவ மண்ணாக மாறினால், மதசார்பற்ற ஜனநாயகத்தின் இறுதி ஆணியாக அதுவே இருக்கும். எனக்கு தெரிந்து அதுபோல் தமிழ்நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை.

மதங்களை 100 ஆண்டுக்கு முன்பே ஜனநாயகம் ஆக்கிவிட்டோம்
இந்தியாவிலே அதிக மத நம்பிக்கை கொண்ட மண் தமிழ்நாடுதான். அதற்கு காரணம் இந்துத்துவம் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே மதங்களை ஜனநாயகப்படுத்திவிட்டோம். இங்கு யார் வேண்டுமானாலும் கோயில்களின் நிர்வாகியாக முடியும். யார் வேண்டுமானாலும் இங்கு கோயில்களை கட்டி அதை பராமரிக்க முடியும். இதுபோன்ற பிரச்சனைகளை எல்லாம் 100 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் சரி செய்துவிட்டோம்.

இலங்கையை பாருங்கள்...
தமிழ்நாட்டில் சமீபத்திய தொல்லியல் ஆய்வுகளில், எங்கள் கலாச்சாரம் 3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை என்பதை நிரூபித்துள்ளன. நாங்கள் அனைத்து வகையான தீவிரவாதத்தையும் வெறுப்பவர்கள். இலங்கையை பாருங்கள். அவர்கள் எந்த கருத்துக்கும் இடம்கொடுக்காமல் அனைத்தையும் கட்டுப்படுத்தினார்கள். அதனால் தற்போது மிக மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறார்கள்.

கருணாநிதியின் வண்ண தொலைக்காட்சி திட்டம்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி கொடுத்தார். எந்த ஏழை குழந்தையும் பணக்காரர் வீட்டு வாசலில் டிவி பார்ப்பதற்காக நிற்கக்கூடாது என்ற வலுவான கருத்தை அதன் மூலம் அவர் சொன்னார். இந்த ஆண்டு நாங்கள் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். திருமணத்தின் அடிப்படையில் பெண்களுக்கு நிதியுதவி வழங்காமல், அவர்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குகிறோம்.

பாஜகவிடம் ஆன்மாவை விற்ற அதிமுக
தமிழ்நாட்டில் அதிமுக தனது ஆன்மாவை பாஜகவுக்கு விற்றுவிட்டதால், அக்கட்சி மீண்டும் புத்துயிர் பெறுவது கடினம். அதன் விளைவுகளை அதிமுக இனி வரக்கூடிய ஆண்டுகளில் சந்திக்கும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பாஜகவுக்கு வாட்ஸ் அப்பில் களம் அமைத்துக் கொடுத்தது.
பெட்ரோல் டீசல் விலையேற்றத்துக்கு உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மீது மத்திய அரசு பழி சுமத்துகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்ட காலம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றபோது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.












Click it and Unblock the Notifications