நபிகள் நாயகம் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகிகளுக்கு எதிர்ப்பு..தண்டனை தர அரபு நாடுகள் வலியுறுத்தல்
நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன.
டெல்லி: வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என குவைத் அரசு வலியுறுத்தியுள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியுள்ளது. இஸ்லாமிய மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்ததற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கத்தார் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Recommended Video
சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட விவகாரமும் பூதாகரமாக வெடித்தது.

நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு
நுபுர் சர்மாவுக்கு எதிராக இபிகோ 153ஏ - மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், நுபுர் சர்மாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து கான்பூர் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சபார் ஹயத் ஹாஸ்மி பந்த்-க்கு அழைப்பு விடுத்தார்.

கான்பூரில் போராட்டம்
இந்த முழு அடைப்பு நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமி இருந்தனர். அப்போது மற்றொரு தரப்பு சந்தையில் கடைகளை மூட விருப்பம் இல்லை எனக் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்பட்டு, அது இரு பிரிவினர் இடையே மத மோதலாக வெடித்தது. அங்கு கற்கல் வீசப்பட்டு பொது சொத்துக்கள் அடித்து சூறையாடப்பட்டன.

நுபுர் சர்மா சஸ்பெண்ட்
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நுபுர் சர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், டெல்லி பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனிடையே பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சி எனவும், எந்த மதத்தை அவமதிப்பதையும் ஏற்க முடியாது என பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் எதிரொலி
இவ்விவகாரம் அரபு நாடுகளிலும் இந்த பேச்சு எதிரொலித்துள்ளது. நபிகள் நாயகம் தொடர்பான சர்ச்சை கருத்து குறித்து உரிய விளக்கமளிக்க இந்திய தூதருக்கு கத்தார் சம்மன் அனுப்பியதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கத்தார் சம்மன்
இந்தியாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், இஸ்லாமிய மதம் பற்றி அவதுாறாக கருத்து தெரிவித்துள்ளனர். இதற்காக, இந்திய துாதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கத்தார் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கத்தார் நாடு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள் என்றும் அவா் கூறியுள்ளார்.

தண்டனை கொடுக்க வேண்டும்
வெறுப்பு பேச்சுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது தீவிரவாதம், வெறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் மிதவாதத்தின் கருத்துகளை குறைத்து மதிப்பிடுவதற்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என குவைத் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது போல் ஈரானும் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications