கைலாஷ் தனிநாடு பிரகடனம்... எவ்ளோ பெரிய தேசதுரோகம்னு தெரிந்தே செய்கிறாரா நித்தியானந்தா?
Recommended Video
டெல்லி: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தற்போது கைலாஷ் என்கிற தனி நாட்டை உருவாக்கியதாக அறிவித்து அதன் பிரதமராக தம்மையே பிரகடனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபாச வீடியோ, சீடர்கள் பலாத்காரம், சிலை கடத்தல், பெண் குழந்தைகள் கடத்தல், ஆதினங்கள் அபகரிப்புகள் என அடுக்கடுக்கான சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நித்தியானந்தா. பெங்களூரு பிடதியில் நித்தியானந்தா உருவாக்கிய ஆசிரமம்தான் அத்தனை சர்ச்சைகளுக்கும் மையமாக இருந்தது.
நித்தியானந்தா மீது இத்தனை புகார்கள் வந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் அவர் இருக்க முடியாத சூழ்நிலை வந்தது. இதனால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் சமூக வலைதளங்களில் தனது பிரசங்கத்தை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார் நித்தியானந்தா.

ஆசிரமம் இழுத்து மூடல்
அண்மையில் குஜராத் ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் கூறப்பட்டது. இப்புகாரை கூறியவர் நித்தியானந்தாவின் செயலாளர்களின் ஒருவராக இருந்த ஜனார்தன் ஷர்மா. அவரது புகாரின் பேரில் குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டு தற்போது அந்த ஆசிரமத்தை இழுத்து மூடியிருக்கிறது.

வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்
மேலும் நித்தியானந்தா எங்கே எனவும் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். அவரது பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் நேபாளம் வழியாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்பட்டு வருகிறது.

நித்தியின் தனிநாடு
இந்நிலையில்தான் கைலாஷ் என்ற இந்துக்களுக்கான தனிநாடு குறித்த நித்தியானந்தாவின் பிரகடனங்கள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை கைலாஷ் நாடு என பிரகடனம் செய்திருக்கிறார் நித்தியானந்தா.

தனிநாடு ஏன்?
இந்து சனாதான தர்மத்தை பாதுகாக்கவும் தங்களது நாடுகளில் இந்து தர்மத்தை கடைபிடிக்க அனுமதி மறுக்கப்பட்டோருக்கான அடைக்கலம் தரும் நாடாகவும் இது இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த நாட்டின் முதன்மை ஆட்சி மொழியாக ஆங்கிலம், 2-வது மொழியாக தமிழ், 3-வது மொழியாக தமிழ் இருக்கும் எனவும் இது தொடர்பான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை விண்ணப்பம்
நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டுக்கான சின்னங்களை அறிவித்துள்ள அதேநேரத்தில் அரசியல் சாசனம் என தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல்நிலையத்தில் கிடைக்கும் ஒரு நூலை இணைப்பாக கொடுத்துள்ளனர். இங்கே குடியேற விரும்புகிறவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றெல்லாம் நித்தியானந்தாவின் கைலாஷ் இணையதளம் குறிப்பிடுகிறது.

தேசதுரோக வழக்கு பாயும்?
இந்தியாவில் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதாக கூறி பஞ்சாப், மணிப்பூரி தீவிரவாதிகள் நாடு கடந்த அரசுகளை உருவாக்கியது தேசத்துரோகம். அதேபோல் இந்தியாவில் இந்து தர்மத்தை கடைபிடிக்க அனுமதி இல்லை என பலாத்கார வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தாந்தா தனிநாடு உருவாக்குவதாக அறிவித்திருப்பதால் அவர் மீது தேசதுரோக நடவடிக்கை பாயக் கூடும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications