வக்பு மசோதா..சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கல்- நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க ஜெகன் கட்சி முடிவு!
டெல்லி: ஆந்திராவில் ஆட்சியில் இருந்தவரை மத்திய அரசின் அத்தனை மசோதாக்களையும் நாடாளுமன்றத்தில் ஆதரித்தது ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ். ஆனால் ஆந்திரா சட்டசபை, லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்க, மத்திய பாஜக அரசின் வக்பு வாரிய மசோதா உள்ளிட்டவைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்க முடிவு செய்துள்ளது. இது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
ஆந்திராவில் முஸ்லிம்கள் 9% உள்ளனர். முஸ்லிம்கள் வாக்குகள் கடந்த காலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு கிடைத்து வந்தது. ஆனால் ஆந்திரா சட்டசபை, லோக்சபா தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு கிடைத்தது. இதனால் இரு தேர்தல்களிலும் வரலாறு காணாத பெரும் தோல்வியை எதிர்கொண்டது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்.

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்த போது, பாஜகவை கடுமையாக எதிர்க்கவில்லை. மத்திய பாஜக அரசுடன் நல்லுறவை கொண்டிருந்தது. இதனாலேயே எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியிலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இணையவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்த மசோதாக்களை கண்ணை மூடிக் கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரித்தும் வந்தது.
ஆந்திரா தேர்தல்கள் தோல்விக்குப் பின்னர் பாடம் கற்றுக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பாஜகவை கடுமையாக எதிர்க்க முடிவு செய்திருக்கிறது. இதனால் நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகளை இந்தியா கூட்டணியுடன் இணைந்து எதிர்க்கவும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் இந்த முடிவு ஆந்திரா அரசியலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்க் நெருக்கடியை உருவாக்கக் கூடும். இத்தகைய முடிவின் மூலமாக தெலுங்கு தேசம் கட்சி பக்கம் திரும்பிய முஸ்லிம் வாக்குகளை மீண்டும் தங்களது வசமாக்க முடியும் என்பதுதான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் வியூகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications