பிரியாணி.. விலங்கு வதை என அசைவ பிரியர்களை தடுக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பரபர வாதம்
டெல்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் கலாசாரமாகும். சாதி, மதங்களை கடந்து மசூதி, சர்ச்சுகளில் கூட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சிலர் வெஜிடேரியன் உணவை சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். இது நம்நாட்டின் உணவு கலாசாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகள் பலியிடுவது கலாசாரமாக உள்ளது. இதனால் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கறி சாப்பிடும் அசைவ பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா? என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பாக வாதிடப்பட்டது.
தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2011ல் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எதிர்ப்பு கிளம்பியது.
பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இந்த தடைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எள்முனையளவும் தவறவிடக்கூடாது.. எடப்பாடி வழிநின்று ஜல்லிக்கட்டு உரிமையை காப்பாற்றுங்க.. மாஜி ஆவேசம்!
தடைக்கோரி வழக்கு
ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை. இது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு இதற்கு ஒருபோதும் தடை கூடாது என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். மேலும் 2017ல் சென்னை மெரினா கடற்கரையில் பெரியளவில் போராட்டம் நடந்தது. இதையடுத்து அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை இயற்றியது. இந்த அவசர சட்டத்தை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் சாசன அமர்வு விசாரணை
இந்நிலையில் அவசர சட்டத்துக்கு தடைக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கு தற்போது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. கேஎம் ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி டி ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு தினமும் வழக்கை விசாரித்து வருகிறது.
தமிழக அரசு வாதம்
அதன்படி இன்றும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ராகேஷ் திரிவேதி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டு வாதாடினார். அவர் வாதாடும்போது கூறியதாவது:
பிரியாணிக்காக விலங்குகள் பலி
விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டசபை, நாடாளுமன்ற சபைகளுக்கு அதிகாரம் உண்டு. குறிப்பாக விலங்குவதை தடுப்பு சட்டம் இயற்ற சட்டசபைக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் பிரத்யேக கலாச்சாரத்தை கொண்டுள்ளது. சிலர் வெஜிடேரியன் உணவை சாப்பிடுகிறார்கள். சிலர் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். இது நம்நாட்டின் உணவு கலாசாரம் உள்ளது. பிரியாணிக்காக விலங்குகள் பலியிடுவது கலாசாரமாக உள்ளது. இதனால் விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் கறி சாப்பிடும் அசைவ பிரியர்களை தடுத்து நிறுத்த முடியுமா?. விலங்குகள் பலியிடுவது என்பது மதத்தின் ஒரு அங்கமாக கூட இருக்கிறது. தற்போதைய சூழலில் விலங்குகளுக்கான வதை அனைத்தையும் முற்றிலுமாக தடுக்க முடியாது'' என்றார்.
மசூதி-சர்ச்சுகளில் ஜல்லிக்கட்டு
மேலும் அவர் தொடர்ந்து வாதாடுகையில், ‛‛தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான காலம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. எந்த வகையான காளைகளை போட்டியில் களமிறக்கலாம் என்பது பற்றியும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொன்றுதொட்டு கலாசாரமாக பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த கலாசாரத்தை காப்பது என்பது அரசின் கடமையாகவும், பொறுப்பாகவும் உள்ளது. இதனை காக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது தான் ஜல்லிக்கட்டுக்கான சட்டமாகும். தற்போது மசூதி மற்றும் சர்ச்சுகளில் கூட இந்த நிகழ்ச்சியை நடத்த துவங்கி உள்ளனர். இதனால் ஜல்லிக்கட்டு சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது'' என்று வாதிட்டார்.
1.17 லட்சம் காளைகள் பங்கேற்பு
மேலும், ‛‛ஜல்லிக்கட்டு என்பது கலாசாரமாக உள்ளது. இதனை ஒழுங்குப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையின்போது காளைகள் வதைத்தல், காளைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க முடியும். ஆனால் ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டையும் நிறுத்த முடியாது. தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஜல்லிக்கட்டு தொடர்பாக 396 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் காளைகள் பங்கேற்கின்றன'' என வாதம் செய்தார். இதையடுத்து மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.
பீட்டா வாதிட்டது என்ன?
முன்னதாக பீட்டா சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பீட்டா சார்பில் ஷ்யாம் திவான் வாதிட்டார். ‛‛பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றி இருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது. மேலும் காளைகளை பாதுகாப்பதாக கூறி அவசர சட்டம் வாயிலாக காளைகளை வீரர்களுக்கு மத்தியில் போராட வைப்பது கொடூரமானது. காளையை வளர்ப்பது நல்லது விஷயம் தான். ஆனால் காளைகளை கொடுமைப்படுத்தக்கூடாது. விதிகள், சட்டங்கள் இருந்தாலும் கூட அதனை முழுமையாக பாதுகாப்பானதாக நடைமுறைப்படுத்த முடியாது'' என்றார்.