வாஜ்பாய்க்கு ஓகே சொன்னார் நேரு...இன்று ஏன் தயக்கம்...பிரதமர் ஏன் இங்கில்லை... காங்கிரஸ் கேள்வி!!
டெல்லி: ஏன் முக்கியமான விஷயங்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயங்குகிறது. 1962ஆம் ஆண்டின் போர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வாஜ்பாய் கேட்டுக் கொண்டபோது, நேரு இரண்டு நாட்கள் ஒதுக்கி இருந்தார் என்று காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
'இந்திய, சீனா எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆக்கிரமிப்பு நிலத்தை விட்டுக் கொடுக்க சீனா மறுக்கிறது. நாட்டின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று இன்று லோக்சபாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக கேள்விகள் எழுப்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. அப்போது பேசிய லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன், ''முக்கிய விஷயங்களை விவாதிக்க மத்திய அரசு அனுமதியளிக்க மறுக்கிறது. 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே போர் நடந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கோரிக்கை வைத்து இருந்தார். இதற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒப்புக் கொண்டு இருந்தார். அந்த பாரம்பரியத்தை அவையில் பின்பற்ற வேண்டும்.
சட்டம் 160ன் கீழ் இரண்டு நோட்டீஸ்கள் அளித்து இருந்தேன். ஆனால், அவற்றுக்கு எந்த பதிலும் இல்லை. எங்களது கேள்விகளுக்கு மத்திய அரசு அஞ்சுகிறது. பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசுகிறார். ஆனால், நமது வீரர்களுக்கான தீர்மானத்தின்போது பிரதமர் ஏன் அவையில் இல்லை.
நமது நாட்டின் நிலத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை, யாரும் நமது எல்லைக்குள் நுழையவில்லை என்று பிரதமர் தெரிவித்து இருந்தார். இதற்கு பயந்து வரவில்லை போலும்'' என்றார்.
எதைப் பற்றியும் சட்டை செய்யாத சீனா.. லடாக் எல்லையில் ஃபைபர் கேபிள் அமைக்கிறது.. வெளியான திடுக் தகவல்
பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசிய சில நிமிடங்களில் அவையில் இருந்து காங்கிரஸ் கட்சினர் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் லோக்சபா துணைத்தலைவர் கவுரவ் கோகோய் பேசுகையில், ''எல்லையில் நமது வீரர்களுக்கு துணையாக இருப்போம் என்ற செய்தியை அனுப்பி, சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கை விடுவதற்கு அதிர் ரஞ்சன் நேரம் கேட்டு இருந்தார். ஆனால், அவர்கள் மட்டுமே ராணுவத்துக்கு ஆதரவாக பேச முடியும் என்று பேசியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
இவரையடுத்து பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், ''ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இந்த நாடே துணை நிற்கிறது. 1962 குறித்து பேசுவதற்கு சட்ட ரீதியிலான நியாயமான பிரச்சனைகள் உள்ளன. எல்லையில் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைக் கோடு குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருக்கிறது என்று ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால், எல்லையில் தற்போது யாருடைய எல்லை, எங்கு இருக்கிறது என்பது இன்னும் வரையறுக்கப்படவில்லை என்று கூறுகிறார். இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பக் கூடாதா'' என்றார்.