இன்று நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காது.. விமானிகள் அதிரடி முடிவு
டெல்லி: மூன்று மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால், இன்று நள்ளிரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்காது என ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. இதன் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் தங்களது பதவியில் இருந்து விலகி விட்டனர்.

ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதால் கடந்த ஆண்டில் இருந்தே சரியான தேதிக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடித்தே வழங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக விமானிகள், பொறியாளர்கள் என அனைத்து பணியாளர்களுக்கும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் சம்பளம் தராமல் இழுத்தடித்து வருகிறது.
இதனால் விரக்தியில் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாகவும், நாளை முதல் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் இயங்காது என்றும் அறிவித்துள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் யூனியன் தலைவர் கேப்டன் கிரன் சோப்ரா இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் "இதுவரை எங்களால் நிறுவனத்தை காப்பாற்ற முடிந்த அளவு பங்களிப்பை செய்து வந்தோம். இப்போது எல்லை மீறி போய்விட்டது. இனி எங்களால் முடியாது. எங்கள் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக்காக விமானிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications