ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜகவின் ஆயுதமான 'சனாதன தர்மம்'.. அஸ்ஸாம் முதல்வர் பேச்சால் பஞ்சாயத்து!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியின் வெற்றியின் மூலம் சனாதன தர்மத்தைப் பாதுகாப்போம் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சந்தால் பர்கானா பிராந்தியத்தில் இந்துக்களின் மக்கள் தொகை 90%-ல் இருந்து 67% ஆக குறைந்துவிட்டது எனவும் ஹிமந்த பிஸ்வா சர்மா பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய 2 கட்டங்களாக மொத்தம் உள்ள 81 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்ட வாக்குகளும் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இணை பொறுப்பாளரான அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த தேர்தல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸுக்கானதாக இருக்காது. சனாதன தர்மத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதுகாக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவின் வெற்றியின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சனாதன தர்மத்தைப் பாதுகாப்போம்.
6 மாவட்டங்களை உள்ளடக்கிய சந்தால் பர்கானா பிராந்தியத்தில் 1951-ம் ஆண்டு மொத்த மக்கள் தொகை 26 லட்சம் பேர். அப்போது 90% இந்துக்கள்; 9.43%தான் முஸ்லிம்கள். பழங்குடிகளின் மக்கள் தொகை 10.34 லட்சமாக இருந்தது. இந்துக்களின் மக்கள் தொகையில் இது 44%. ஆனால் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் மக்கள் தொகை 67% ஆக குறைந்துவிட்டது. 44% ஆக இருந்த பழங்குடிகள் மக்கள் தொகை வெறும் 28% ஆக குறைந்து போனது. புதியதாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது இந்துக்களின் விழுக்காடு 60% ஆகவும் குறையக் கூடும். பூர்வீக முஸ்லிம்களின் மக்கள் தொகை இங்கே அதிகரிக்கவில்லை. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் வழியாக ஜார்க்கண்ட்டுக்குள் ஊடுருவிய வங்கதேச முஸ்லிம்கள்தான் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இந்த ஊடுருவல் முஸ்லிம்கள், பழங்குடி பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றி உள்ளனர். பழங்குடிகளின் நிலங்களைக் கைப்பற்றி பழங்குடி கிராமங்களின் தலைவர்களாக உருமாறி இருக்கின்றனர். பாஜக ஆட்சியில் ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்பட்டு கட்டுப்படுத்தப்படுவர். இவ்வாறு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசினார்.












Click it and Unblock the Notifications