மதுரை எய்ம்ஸ்-க்காக ஜப்பான் கம்பெனியுடன் ஒப்பந்தம் கையெழுத்தாமே.. விரைவில் கட்டுமான பணி தொடக்கம்?
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த மாத இறுதியில் ஜைக்கா நிதி நிறுவனத்துடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒரு அறிகுறி கூட இதுவரை தென்படவில்லை.
எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும்?
2 ஆண்டுகள் கட்டுமான பணிகள் துவங்கப்படாத நிலையில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. நெட்டிசன்கள் மீம்ஸ்களை போட்டு தள்ளினார்கள். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசப்பட்டது. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டிய செங்கலை செல்லும் இடமெல்லாம் கொண்டு சென்று இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என்று கிண்டலாக கூறினார்.
ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜைக்கா நிதி நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் கையெழுத்தான உடன் பணிகள் துவங்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது.இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் ஜைக்கா நிதி நிறுவனத்துடனான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
பாவூர்சத்திரத்தை சேர்நதவர் கேள்வி
பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜ் என்பவர் எப்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இறுதிக்கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகும், திட்ட மதிப்பீடு 1264 கோடியிலிருந்து 2 ஆயிரம் கோடியாக உயர்த்த காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைத கவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எழுப்பியுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்
இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம், ' எய்ம்ஸ் அமைப்பதற்கான கடன் ஒப்பந்தத்தில் கடந்த மாத இறுதியில் கையெழுத்தாக்கியுள்ளதாகவும், கடன்தொகை பெறப்பட்ட பின்னர் திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளதன் முழு விவரங்களை வழங்கமுடியும்'' என்று கூறியுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் மதுரையில் விரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது.