ஜம்மு காஷ்மீர் படுகொலைகள்- அமித்ஷா ராஜினாமா செய்ய கோருவது பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகள் வெறிச்செயல் தொடருகிறது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று வங்கி அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பா மாவட்டத்தில் ரஜினி பாலா என்ற ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்ட 36 மணிநேரத்தில் நடந்த மற்றொரு படுகொலை சம்பவம் இது.
ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியில் அமர்த்தப்படும் இந்துக்களையும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்து தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலி லிருந்தாலும் காஷ்மீர் இந்துக்கள் நாள்தோறும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ஆகையால் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என கோருவதற்கு தேவை இருக்கிறது. சமீபகாலமாக கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டுவதால் அமித்ஷாவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கலாம் என கூறியுள்ளார்.