'ஐடி இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடி'.. எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: ஐடி இளைஞர்களை குறிவைத்து போலி வேலை வாய்ப்பு மோசடிகள் நடப்பதாகவும், அத்தகைய கும்பலிடம் இருந்து இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு தருவதாக கூறி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 30 இந்திய ஐடி இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக் விமான நிலையத்தில் இறங்கியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து மியான்மர் நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா 2.0? அதே வௌவால்கள்.. இந்த முறை ரஷ்யாவில் இருந்து! வேக்சின்கள் வேலை செய்யாது.. இது 'கோஸ்டா-2'
300 பேர் கடத்தப்பட்டனர்
பின்னர் அவர்களை சைபர் குற்றச்செயல்களில் ஈடுபட வலியுறுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதில் தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மியான்மரில் தவித்து வந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மியான்மரில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்களை விடுவித்து தாயகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
இந்த நிலையில், ஐடி இளைஞர்களை குறிவைத்து போலி வேலை வாய்ப்பு மோசடிகள் நடப்பதாகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:-ஐடி துறை இளைஞர்களை குறிவைத்து போலி வேலைவாய்ப்பு மோசடிகள் நடப்பது கவனத்திற்கு வந்துள்ளது.
ஆய்வு செய்துகொள்ள வேண்டும்
சமூக வலைத்தளங்கள் மற்றும் பிற தளங்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு ஆஃபர்களை நம்பி வலையில் சிக்கி விட வேண்டாம். வேலைவாய்ப்புகளை பெறும் நோக்கத்தில் சுற்றுலா விசா அல்லது விசிட் விசாவில் செல்வதற்கு முன்பாக வேலை தருவதாக கூறுபவர்களின் நம்பகத்தன்மையை செக் செய்து கொள்ளுங்கள். வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்ளும் முன்பாக நிறுவனங்களின் முந்தைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.
தாய்லாந்தில் வேலைவாய்ப்பு
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியும் தனது பேட்டியின் போது,''தாய்லாந்தில் வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறி இந்திய இளைஞர்களை குறிவைத்து, கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் மோசடியில் ஈடுபடும் கும்பல்கள் மற்றும் போலி ஐடி கம்பெனிகள் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றன. துபாய், பாங்காங்க் மற்றும் இந்தியாவில் உள்ள மோசடி ஏஜெண்ட்கள் மூலம் இந்த மோசடி நடப்பதாக தெரிகிறது'' என்று தெரிவித்தார். மேலும் இந்தியா மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசினார்.