வக்பு மசோதா- நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கடும் விவாதம்- திமுக ஆ.ராசா உட்பட 10 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
டெல்லி: மத்திய அரசின் வக்ஃபு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் இன்று மிக கடுமையான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் ஈடுபட்டதற்காக திமுகவின் ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சிகளின் 10 எம்.பிக்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற லோக்சபாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ந் தேதி வக்ஃப் வாரியம் (வக்பு) தொடர்பாக இரண்டு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, இது வக்ஃப் வாரியத்தின் பணியை சீரமைக்கும் மற்றும் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அறிமுக நிலையிலேயே திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து வக்பு மசோதாக்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு ஜகதாம்பிகா பால் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் கடைசி ஆலோசனைக் கூட்டம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இந்த குழுவில் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று திடீரென வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் திமுகவின் ஆ.ராசா உள்ளிட்ட நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், இந்தக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். எதிர்க்கட்சிகளின் இந்த எதிர்ப்பை மீறி இன்றே நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற நிலைக் குழுவின் கூட்டங்களை அவசரம் அவசரமாக நிறைவு செய்து அறிக்கையைப் பெறுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே திருத்தப்பட்ட வக்பு மசோதாவை தாக்கல் செய்வதும் மத்திய அரசின் திட்டம் என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம் சாட்டி கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுகவின் ஆ.ராசா உட்பட எதிர்க்கட்சிகளின் 10 எம்.பிக்கள் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications