நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பதவி நீக்க நோட்டீஸ்.. ஏற்பது பற்றி ஆய்வு - சபாநாயகர் ஓம்பிர்லா அறிவிப்பு
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் விசாரித்தார். மலை மீது உள்ள தீபத்தூணை ஆய்வு செய்த அவர் கார்த்திகை நாளில் விளக்கேற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்ட நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் வழங்கிய தகுதி நீக்க நோட்டீஸ் குறித்த முக்கிய விஷயத்தை சபாநாயகர் ஓம்பிர்லா இன்று தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் முருகனின் முதல்படை வீடு அமைந்துள்ளது. இந்த கோவில் மலையில் சிக்கந்தர் தர்கா உள்ளது. அந்த தர்காவிற்கு சற்று தொலைவில் தீபத்தூண் உள்ளது. இந்த தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நேரடியாக மலைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தீர்ப்பு வழங்கினார். கார்த்திகை நாளில் மலை மீதான தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கினார். இந்த தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படவில்லை. தீபம் ஏற்ற போனவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருதரப்பினர் இடையே பிரச்சனை வரும் என்று கூறி போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், தமிழக அரசு சார்பில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்க்கும் மேல்முறையீடு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே தான் திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் நாடாளுமன்றத்தின் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் நோட்டீஸ் வழங்கினர். திமுக எம்பி கனிமொழி ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி உள்பட பிற கட்சிகளின் எம்பிக்களுடன் சேர்ந்து இந்த நோட்டீசை ஓம்பிர்லாவிடம் வழங்கினார். அதில் ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா என இருஅவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தான் டெல்லியில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ‛இந்தியா' கூட்டணி கட்சிகளின் வழங்கிய நோட்டீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஓம்பிர்லா, ‛‛முறையான நடைமுறைகளை பின்பற்றி தகுதி நீக்க நோட்டீஸை ஏற்பது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று கூறினார். அதாவது எதிர்க்கட்சியினர் வழங்கிய நோட்டீஸை ஏற்கலாமா? இல்லையா? என்பது பற்றி முதலில் ஆய்வு செய்ப்படும். அதன்பிறகு தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications