கோகாய்-க்கு எம்பி பதவி- நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலையும்: நீதிபதி குரியன் ஜோசப்
டெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்திருப்பதன் மூலம் சாமானியர்களிடத்தில் நீதித்துறை மீதான நம்பகத்தன்மை சீர்குலைந்து போகும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குரியன் ஜோசப் கூறியுள்ளதாவது: நீதித்துறையின் சுதந்திரத்தை வலியுறுத்திதான் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நாங்கள் செய்தியாளர்களை சந்தித்தோம்.
நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர் ஆகியோருடன் நானும் இணைந்து நீதித்துறையில் பிறரது தலையீடு குறித்து புகார் தெரிவித்திருந்தோம். இப்போது தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய் சமரசங்களை செய்து கொண்டு எம்பி பதவியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
கோகாய், ராஜ்யசபா எம்பி பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் நீதித்துறை மீதான சாமானியர்களின் நம்பிக்கை சீர்குலைகிறது. நீதித்துறை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படைகளில் ஒன்று. அதன் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. நீதித்துறைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு குரியன் ஜோசப் கூறினார். ஏற்கனவே தமக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகாய், முதலில் டெல்லி சென்று எம்.பி பதவியை ஏற்க வேண்டும். அதன்பின்னர் இப்பதவியை ஏன் ஏற்றுக் கொண்டேன் என விளக்கப் போவதாக கூறியிருந்தார்.
ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில்தான் மத்திய அரசுக்கு எதிரான ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை முன்வைத்து கடும் விமர்சனங்கள் இப்போது எழுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.