4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக!
கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்குச் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு மாலை நேரத்தில் வெளியானது. இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு சில மணி நேரம் முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் சீக்கிரமே முடிவடைகிறது. இந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையர் இன்று மாலை அறிவித்தார். அதில் மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு
இதற்கிடையே தேர்தல் அறிவிப்பு வெளியாக சில மணி நேரத்திற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை அகவிலைப்படி (DA) தொகையை வரும் மார்ச் மாதம் முதல் வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
மம்தா
இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், "எங்கள் அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும், லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும், பஞ்சாயத்துகள், மாநகராட்சி அமைப்புகள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள்/ ஓய்வூதியதாரர்களுக்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அவர்கள் தங்களின் ROPA 2009 அகவிலைப்படி நிலுவைத் தொகையை 2026 மார்ச் மாதம் முதல் பெறுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாயும் பாஜக
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களைக் கவரும் வகையில் மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேநேரம் இந்த அறிவிப்பு ஒரு "தேர்தல் தந்திரம்" எனச் சாடியுள்ள பாஜக, உண்மையில் மக்களுக்கு பணம் வந்து சேராது எனக் கூறியுள்ளது.
கடும் தாக்கு
இது தொடர்பாக பாஜகவின் சுவேந்து அதிகாரி, "என்ன ஒரு கேலிக்கூத்து! தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தான் மம்தா பானர்ஜிக்கு லட்சக்கணக்கான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நினைவுக்கு வந்தார்களா? ROPA 2009 அகவிலைப்படி நிலுவைத் தொகை 2026 மார்ச் முதல் வழங்கப்படுமாம்? பல ஆண்டுகளாக மாநில கருவூலத்தைக் கொள்ளையடித்து ஏமாற்றிய பிறகு, இது உங்களின் கடைசி நிமிடத் தேர்தல் ஸ்டண்ட்தானா?
உண்மையில் ஒரு பைசா கூட விடுவிக்கப்படாது. பொறுப்புணர்வு இல்லை, நிதி இல்லை, எந்தப் பணிகளும் இல்லை.. மக்களைக் கடைசி முறையாக ஏமாற்றத் தானே இந்த அறிவிப்பு... இது திரிணாமுலின் கிளாசிக் தேர்தல் நாடகம். மேற்கு வங்கம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு அறிவிப்பு
இது ஒரு பக்கம் இருக்கத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பூசாரிகள் மற்றும் மவுசின்மார்களின் மாத ஊதியத்தை அதிகரிக்கும் தனி அறிவிப்பையும் வெளியிட்டார். இதன் மூலம் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் நடைமுறைக்கு வரும் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்னதாக இவை வந்துள்ளன.
மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது சமூகங்களின் ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கையை நிலைநிறுத்தும் நமது புரோகிதர்கள் மற்றும் மவுசின்மார்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் ₹500 உயர்த்தப்படும் என அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications