குட்பை சொன்ன ராகுல் தளபதி ஜோதிராதித்யா சிந்தியா- இளைய தலைமுறை தலைவர்களை இழக்கும் காங்கிரஸ்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் தளபதிகளில் ஒருவராக இருந்த ஜோதிராதித்யா சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நிலையில் அக்கட்சி இளம் தலைமுறை தலைவர்களை இழக்க தொடங்கியிருப்பது மிகவும் மோசமான காலகட்டம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
Recommended Video
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்ற போது இளைய தலைமுறை தலைவர்களாக புதிய முகங்களை களமிறக்கினார். இந்த வரிசையில் மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியா, ராஜஸ்தானில் சச்சின் பைலட் என பலருக்கும் அரசியலில் மிக முக்கியத்துவம் கிடைத்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இளைய தலைமுறை தலைவர்களுக்குமான யுத்தம் ஒரு தொடர் கதையாகி வந்தது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்ற போது முதல்வர் பதவியை மிகவும் எதிர்பார்த்தார் சிந்தியா. ஆனால் மூத்த தலைவர் என்பதால் கமல்நாத், முதல்வரானார்.
அமித் ஷாவின் சாணக்கியத்தனமா இது..? நோ, நோ.. காங்கிரசின் தோல்வி.. மகா தோல்வி!!
முரண்டு பிடிக்கும் சீனியர்கள்
இதில் சிந்தியா படு அதிருப்தியில் இருந்தார். இந்த அதிருப்திதான் உச்சமாகத்தான் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகிவிட்டார் சிந்தியா. 2019 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அப்போதே கட்சியின் மூத்த தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்காததாலேயே ராகுல் ராஜினாமா செய்தார் என்கிற கருத்து முன்வைக்கப்பட்டது.
நெருக்கடியில் இளைய தலைமுறை தலைவர்கள்
காங்கிரஸில் மூத்த தலைவர்கள் தங்களது பிடியை அடுத்த கட்ட தலைவர்களிடம் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இதனால் அவர்களுடன் மல்லுக்கட்டுவது கடினம் என்று உணர்ந்தே ராகுல் காந்தி தமது ராஜினாமாவில் உறுதியாக இருந்தார். இது ராகுலுக்கு மட்டுமல்ல.. அவரது தளபதிகளான ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் என பலருக்கும் நெருக்கடியாகவே இருந்தது.
மூழ்கும் காங். கப்பல்
மத்தியில் பாஜக விஸ்வரூபத்துடன் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் தம்முடைய இந்துத்துவா கொள்கைகளை அமல்படுத்துவதிலும் பாஜக படுதீவிரமாக இருக்கிறது. இந்த சூழலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய வலிமை கொண்ட கட்சியாக திகழ வேண்டிய பொறுப்பு காங்கிரஸுக்கு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியால் இதனை செய்ய முடியாத மூழ்கும் கப்பலாக இருந்து வருகிறது.
அடுத்த விக்கெட் சச்சின் பைலட்?
தற்போது ஜோதிராதித்யா சிந்தியா போன்ற இளைய தலைமுறையை காங்கிரஸ் கழற்றிவிடுவது என்பது அக்கட்சி தமக்கு மீண்டும் மீண்டும் ஆழமாக குழிதோண்டிக் கொண்டே இருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஜோதிராதித்யா சிந்தியா பாணியில் ராஜஸ்தானில் கலகக் குரல் கொடுத்து வரும் சச்சின் பைலட்டும் நடையை கட்ட வெகுகாலம் ஆகிவிடாது. இதேநிலை நீடித்தால் காங்கிரஸ் கட்சியில் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இளைய தலைமுறை தலைவர்களே இல்லாத பரிதாபமான நிலைதான் உருவாகும்.