‛எமர்ஜென்சி’ படம் வெளியாகுமா? மிரட்டலால் தணிக்கை சான்று வழங்குவதில் சிக்கல்! கலங்கிய கங்கனா ரனாவத்
டெல்லி: பாஜக எம்பியான கங்கனா ரனாவத் நடித்துள்ள ‛எமர்ஜென்சி' திரைப்படம் வெளியானால் பிரச்சனைகள் வெடிக்கும் என்று சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் ‛எமர்ஜென்சி' திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளது பற்றியும், மிரட்டல் தொடர்பாகவும் கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டுள்ளது.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்பியாக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.

முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய ‛எமர்ஜென்சி'யை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்துக்கும் ‛எமர்ஜென்சி' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கங்கனா ரனாவத் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையொட்டி கடந்த 14ம் தேதி படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் ‛எமர்ஜென்சி' திரைப்படத்துக்கு இன்னும் சென்சார் போர்டில் இருந்து தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
இதற்கு அந்த படத்துக்கு கிளம்பி உள்ள எதிர்ப்பு தான் காரணமாகும். அதாவது கங்கனா ரனவாத் நடித்துள்ள ‛எமர்ஜென்சி' திரைப்படத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. குறிப்பாக பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் சிரோமணி அகாலி தளம் இந்த திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ‛எமர்ஜென்சி' திரைப்படம் வெளியானால் தவறான தகவல்கள் பர வாய்ப்புள்ளது. இதனால் தேவையில்லாத வதந்திகள் பரவும். அது வகுப்புவாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் அந்த படத்தை தணிக்கையில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக சிரோமணி அகாலிதளம் சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களுக்கும் இந்த திரைப்படம் தொடர்பாக மிரட்டல் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு றுதணிக்கைக்காக சென்ற ‛எமர்ஜென்சி' திரைப்படத்துக்கு இன்னும் சான்றிதழ் என்பது வழங்கப்படவில்லை.
இதனை கங்கனா ரனாவத்தும் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛எனக்கும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தனக்கும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்கும் மிரட்டல் வருகிறது. இதற்கிடையே 'எமர்ஜென்சி' படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எங்கள் படத்துக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது மிரட்டல் காரணமாக சென்சார் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இந்திரா காந்தி கொலை, ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே, பஞ்சாப் கலவரம் போன்றவற்றை காட்டக்கூடாது என்று மிரட்டலுடன் அழுத்தம் வருகிறது. இதனை காட்டாவிட்டால் படத்தில் எதனை காட்ட முடியும் என்பது தெரியவில்லை. இதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications