வறுமையை ஒழிச்சிட்டீங்க- பட்டினி குறியீட்டில் 101-வது இடம்...வாழ்த்துகள் மோடிஜி... கபில் சிபல் கிண்டல்
டெல்லி: சர்வதேச பட்டினி குறியீட்டு வரிசையில் இந்தியா 101-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது; ஆகையால் வறுமையை ஒழித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள் என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கிண்டலடித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியின் ஹங்கர் ஹில்ப் ஆகியவை இணைந்து சர்வதேச நாடுகளின் பட்டினிக் குறியீடு குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டினி, ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 107 நாடுகளின் ஒப்பீட்டு பட்டியலில் இந்தியா 94-வது இடத்தில் இருந்தது. தற்போது 116 நாடுகளின் ஒப்பீட்டு பட்டியலில் இந்தியா 101-வது இடத்துக்கு சரிந்திருக்கிறது.
அதாவது பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா பட்டினி குறியீட்டு பட்டியலில் பின்தங்கி இருப்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவை விட பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான், நைஜீரியா, காங்கோ, மொசாம்பிக், சோமாலியா உள்ளிட்ட பல நாடுகள் பின்தங்கி இருக்கின்றன. குழந்தைகளுக்கு சத்துணவு, சரிவிகித உணவு ஆகியவற்றை வழங்குவது தொடர்பாக சர்வதேச பட்டினிக் குறியீட்டில் நேபாளம், வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் ஆகியவை இந்தியாவுக்கு முந்தைய பட்டியலில் உள்ளன.

இந்த பட்டியலை முன்வைத்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் இந்த பட்டியலை சுட்டிக்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டலடித்துள்ளார். கபில் சிபல் தமது பதிவில், வறுமை, பட்டினி, சர்வதேச வல்லரசு, டிஜிட்டல் இந்தியா என பலவற்றை ஒழித்துவிட்டீர்கள் பிரதமர் மோடி ஜி.. உங்களுக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 2020-ல் பட்டினிக் குறியீட்டு பட்டியலில் இந்தியா 94 வது இடம்; 2021-ல் இந்தியா 101வது இடம் பெற்றுள்ளது என்பதையும் பதிவிட்டுள்ளார். அத்துடன் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு பின்னால் இருக்கிறது இந்தியா என குறிப்பிட்டுள்ளார் கபில் சிபல். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications