மேகதாது அணை.. தமிழ்நாட்டுக்கு எதிராக கைகோர்த்த காங்கிரஸ்- பாஜக! மோடியிடம் வலியுறுத்திய சித்தராமையா!
டெல்லி: காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக கைகோர்த்துள்ளன. டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு தர வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மத்திய அமைச்சர்களையும் பாஜக எம்பிக்களையும் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீர் பங்கீட்டை கர்நாடகா முறையாக வழங்குவதில்லை. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கர்நாடகா அணைகள் நிரம்பி வழியும் போது மட்டும் காவிரி நதிநீரை முழுவதுமாக திறந்துவிட்டு தமிழ்நாட்டை வெள்ள நீர் வடிகால் நிலமாக பயன்படுத்துகிறது கர்நாடகா. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைப்படி உத்தரவிடும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆணைகளை மதித்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடுவதில்லை.

இதனால் தமிழ்நாட்டின் மேட்டூர் அணை வறண்டு கிடக்கிறது. தமிழ்நாட்டில் காவிரி டெல்டாவின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கர்நாடகாவின் வஞ்சகத்தால் இந்த ஆண்டு போதுமான நீர் இருப்பு இல்லாத நிலையில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் காவிரி டெல்டா பாசனம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த நிலையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா டெல்லி சென்றார். அவருடன் துணை முதல்வர் டிகே சிவகுமாரும் டெல்லி சென்றார். டெல்லி சென்ற உடனேயே கடந்த 27-ந் தேதி கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சோமண்ணா. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் போது மேகதாது அணை, கர்நாடகாவுக்கான மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரையும் சித்தராமையா சந்தித்தார். பின்னர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சித்தராமையா சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார். மேலும் கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை முழுமையாக வழங்கவும் சித்தராமையா, மோடியிடம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடகா அமைச்சர்கள் பரமேஸ்வர், மகாதேவப்பா ஆகியோரும் உடனிருந்தனர்.













Click it and Unblock the Notifications