ஒருபுறம் பயங்கரவாதத்தை ஆதரித்து.. மறுபுறம் பாதுகாவலனாக நடிக்கும் நாடு பாக்.. வெளுத்து வாங்கிய இந்தியா
டெல்லி: பாகிஸ்தான் வெளிப்படையாகவே பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக ஐநா சபையில் குற்றஞ்சாட்டிய இந்தியா, ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு இந்தியாவின் முதன்மை செயலாளர் சினேகா துபே பாகிஸ்தானைக் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்குப் பதில் அளிக்கும் வகையில் சினேகா துபே பேசியிருந்தார்.

காஷ்மீர் விவகாரம்
இம்ரான் கான் தனது பேச்சில் காஷ்மீர் விவகாரத்தை இந்தியா முறையாகக் கையாளவில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சினேகா துபே, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இப்போதும் அது அப்படி தான் உள்ளது. வரும் காலங்களிலும் இதுவே தான் தொடரும்" என்று கூறினார்.

பாகிஸ்தான்
தொடர்ந்து பேசிய சினேகா துபே, "பாகிஸ்தான் தங்களை எதோ பாதுகாவலன் போலக் காட்டிக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினர் தொடர்ந்து அச்சத்துடன் தான் வாழ்கின்றனர். சிறுபான்மையினர் நலனை ஒடுக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஈடுபட்டுள்ளது" என்று கடுமையாகச் சாடினார்.

பயங்கரவாதிகளுக்குப் புகலிடம்
மேலும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறது. பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி மற்றும் ஆயுதங்களை அளிக்கும் நடவடிக்கைகளிலும் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபடுவது உலக நாடுகளுக்கும் தெரியும். ஐநாவால் தடை செய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாதிகளுக்குப் பாகிஸ்தான் புகலிடம் அளித்துள்ளது. ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் தான் தஞ்சம் புகுந்திருந்தார். இன்றும் கூட, ஒசாமா பின்லேடனை பாகிஸ்தான் தியாகி என்றே குறிப்பிடுகிறது.

மத வன்முறை
தாங்கள் 'பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்' என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. பயங்கரவாதிகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் அவர்களை கொல்லைப்புறத்திலேயே வளர்க்கிறது. இதன் காரணமாக நாங்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவர்கள் தங்கள் நாட்டில் நடக்கும் மதவெறி வன்முறைகளைப் பயங்கரவாதச் செயல்களாக மறைக்க முயல்கின்றனர்.
Recommended Video

இந்தியா
பாகிஸ்தான் தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான தகவல்களைப் பரப்ப ஐநா சபையைத் தவறாகப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல, பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருந்து கொண்டு உலகத்தின் கவனத்தைத் திசை திருப்ப அவர்கள் முயல்கின்றனர். அங்குச் சாதாரண மக்களின் வாழ்க்கை, குறிப்பாகச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானைப் போல இல்லாமல், இந்தியா சுதந்திர ஊடகங்களையும் சுதந்திரமான நீதித்துறை அமைப்பையும் கொண்ட நாடு. இவை தான் நமது அரசியலமைப்பைக் கண்காணித்து, பாதுகாக்கிறது. இந்தியாவில் பல முக்கிய உயர் பதவிகளில் சிறுபான்மை சமூகத்தினர் உள்ளனர். ஆனால், பன்மைத்துவம் என்ற கொள்கையையே பாகிஸ்தானால் புரிந்து கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் கடமை
பாகிஸ்தான் உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் சாதாரண உறவையே இந்தியா விரும்புவதாக குறிப்பிட்ட சினேகா துபே, இதற்குத் தேவையான சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தான் கடமை என்றும் தெரிவித்தார். இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் பாகிஸ்தானால் இதைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications