காஷ்மீரி குடும்பத்தை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த முயற்சி! உச்சநீதிமன்றம் அதிரடி தடை
டெல்லி: காஷ்மீரை சேர்ந்த குடும்பம் ஒன்றை, பாகிஸ்தானியர்கள் என்று கூறி, அந்நாட்டுக்கு அவர்களை நாடு கடத்த காவல்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், நாடு கடத்தும் முயற்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இவர்கள் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது பாகிஸ்தானியர்கள் என்று எப்படி முத்திரை குத்த முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கிறது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மீறி தங்கியிருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியாக காஷ்மீரை சேர்ந்த குடும்பத்தினரை வெளியேற்ற காவல்துறையினர் முயன்றிருக்கின்றனர். இதனை எதிர்த்து அஹ்மத் தாரிக் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
தாரிக் இந்த குடும்பத்தில் ஒருவர். இவரும் இவரது சகோதரரும் பெங்களூரில் வேலை பார்த்து வருகின்றனர். மே 1ம் தேதி தாரிக் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஸ்ரீநகரில் உள்ள வெளிநாட்டு பதிவுத்துறை எங்கள் குடும்பத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. நாங்கள் பாகிஸ்தானியர்கள் என்றும், விசா முடிந்துவிட்டால் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து 29ம் தேதி ஜம்மு காஷ்மீர் போலீசார் என் தாய், தந்தை, சகோதரன், சகோதரி என அனைவரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் விட முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் இந்தியர்கள்" என்று கூறியிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு அதே நாளில் வந்தது. தாரிக் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், "தாரிக் குடும்பத்தினர் அனைவரும் இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் இந்தியர்கள். இவர்களை எப்படி பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீசின் நாடு கடத்தும் முயற்சிக்கு நீதிமன்றம் அதிரடி தடை விதித்திருக்கிறது. மட்டுல்லாது குடும்பத்தினரின் ஆவணங்களை சரியாக சரிபார்க்குமாறும் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தாரிக்கின் குடும்பம் கடந்த 1997ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்திருக்கிறது. தாரிக்கின் தாத்தா 1950 காலத்திலேயே இந்திய ஓட்டுரிமையை பெற்றிருக்கிறார். ஸ்ரீநகரில் இவர்களுக்கு சொந்தமாக வீடும், நிலமும் இருக்கிறது. இப்படி இந்தியர்கள் என்று நிரூபிக்கும் ஆவணங்கள் இருந்தும் அவர்களை நாடு கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications