டெல்லி மாநகராட்சி தேர்தல்.. ஒட்டுமொத்தமாக புறக்கணித்த கிராம மக்கள்! ஏன் தெரியுமா?
டெல்லி: டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கடேவாரா கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள 250 தொகுதிகளுக்கு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இங்கு ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக இருந்தாலும், கடந்த 3 ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தலில் பாஜகதான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த முறை எப்படியாவது பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆம் ஆத்மியும் காங்கிரசும் முயன்றுகொண்டிருப்பதால் இம்முறை மும்முனை போட்டி நிலவி வருகிறது.
“இவர்களெல்லாம் துரோகிகள்..” சர்ச்சையை ஏற்படுத்திய ஜமா மஸ்ஜித் இமாமின் கருத்து! பரபர குஜராத் தேர்தல்
தேர்தல்
மாநிலம் முழுவதும் 13,6378 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதேபோல மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. மொத்தமுள்ள 250 தொகுதிகளில் சுமார் 1,349 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 1.45 கோடி பேர் வாக்களிக்கின்றனர். கடந்த 2007 முதல் 2017ம் ஆண்டு வரை என மூன்று தேர்தல்களிலும் பாஜகதான் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்று தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் டெல்லி மக்கள் இந்த தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் பிற்பகல் 2 மணி வரை சுமார் 30% மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
கிராம மக்கள்
இதில் வடமேற்கு பகுதியில் உள்ள கடேவாரா கிராமத்தினர் ஒட்டுமொத்தமாக தேர்தலையே புறக்கணித்துள்ளனர். எல்லா பகுதிகளை போல இந்த பகுதியிலும் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் வாக்குப்பதிவு நாளான இன்று கிராமத்திலிருந்து யாரும் வாக்களிக்க செல்லவில்லை. தங்கள் கிராமம் கடந்த பல ஆண்டுகளாகவே கைவிடப்பட்டிருக்கிறது என்றும் எனவே எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாதவரை நாங்கள் வாக்களிக்க மட்டோம் என்று கிராமத்தினர் கூறியுள்ளனர். தேர்தல் அதிகாரிகள் எவ்வளவோ முயன்று பார்த்தும் கிராமத்தினர் வாக்களிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இந்த சம்பவம் டெல்லியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதற்றம்
இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாக்குப்பதிவு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது இவ்வாறு இருக்க மறு முனையில் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது. டெல்லியில் வாக்குரிமை கொண்டுள்ள 1.45 கோடி மக்களில் 2,04,301 பேர் 80-100 வயது வரை உள்ளவர்களாவார்கள். இவர்களுக்கு என பிரத்தேயக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல 68 பிங்க் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 13,6378 வாக்குச் சாவடிகளில் 493 இடங்களில் உள்ள 3,360 சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளை பொறுத்த அளவில், டெல்லி முழுவதும் காவல்துறையினர், பாதுகாப்புப் படையினர் என 40,000 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குப்பை
தற்போது மாலை 4 மணி நிலவரப்படி சுமார் 45% பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முன்னதாக இன்று காலை வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியில் அளவுக்கு அதிகமாக குப்பைகள் சேர்ந்திருக்கிறது. இந்த குப்பைகள் விரைவில் அகற்றப்பட வேண்டும். ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கும்பட்சத்தில் இந்த குப்பைகள் உடனடியாக சுத்தம் செய்யப்படும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.