அமெரிக்கா பிடிவாரண்ட்: 736 மில்லியன் டாலர் அதானி குழும ஒப்பந்தம் ரத்து-கென்யா அதிபர் அதிரடி
டெல்லி: அமெரிக்கா நீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டைத் தொடர்ந்து இந்தியாவின் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்களை கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளார். கென்யாவில் 30 ஆண்டுகளுக்கு 736 மில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி ஒப்பந்தங்களை கவுதம் அதானியின் குழுமம் பெற்றிருந்த நிலையில் அனைத்தையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார் கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ.
மத்திய அரசின் SECI எனப்படும் SECI - Solar Energy Corporation of India உடன் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த SECI நிறுவனத்துடன் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் மின்சார வாரியங்கள் ஒப்பந்தங்கள் செய்ய வலியுறுத்தி லஞ்சம் கொடுத்தது அதானி குழுமம் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களிடம் ரூ20,000 கோடி முதலீடு பெற்றார் அதானி; தாம் லஞ்சம் கொடுத்து மாநிலங்கள் மூலமாக ஒப்பந்தங்களைப் பெற்றதை மறைத்து இந்த முதலீடுகளைப் பெற்றார் அதானி என்பது அமெரிக்காவின் வழக்கு.

சர்வதேச அளவிலும் நமது நாட்டிலும் அதானிக்கு எதிரான பிடிவாரண்ட் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. அதானியை உடனே கைது செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார் .இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப் பெரிய சரிவை சந்தித்தன.
இந்த நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு, பிடிவாரண்ட்டைத் தொடர்ந்து அதானி குழுமத்துடனான எரிசக்தி துறை ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கானது. மொத்தம் 736 மில்லியன் டாலர் மதிப்பிலானது.
அதானி குழுமத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்... கென்யா அரசோடு மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு தடை..!
இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அண்மையில் கென்யா நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த அந்நாட்டு நிறுவனம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அதானிக்கு அமெரிக்கா பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தத்தையே கென்யா அரசு அதிரடியாக ரத்து செய்வதாக அதிபர் வில்லியம் ரூட்டோ அறிவித்துள்ளார்.
மேலும் 1.85 பில்லியன் டாலரில் கென்யாவின் முதன்மை விமான நிலையத்தை அதானி குழுமம் குத்தகைக்கு எடுத்திருந்தது. இதற்கும் அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது விமான நிலைய குத்தகையையும் ரத்து செய்வதாக கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதனால் அதானி குழுமம் பெரும் பின்னடைவுகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications