லக்கிம்பூர் கேரி: அமைச்சர் அஜய் மிஸ்ரா எதிராக அதிகரிக்கும் அழுத்தம்.. பாஜக தலைமையின் முக்கிய முடிவு
டெல்லி: லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக தலைமை என்ன முடிவு எடுத்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக 3 விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராகவும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஓராண்டைக் கடந்தும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
இந்தச் சூழலில் கடந்த மாதம் விவசாய சட்டங்களை ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகள் இதை வரவேற்றாலும் கூட, லக்கிம்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
லக்கிம்பூர் சம்பவம்
கடந்த அக்டோபர் 3ஆம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாஜக தலைவருக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி விட்டுத் திரும்பினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்குச் சொந்தமான கார்கள் விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு நடந்த கலவரத்தில் மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர். விவசாயிகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜினாமா செய்ய வேண்டும்
இந்தச் சம்பவத்தில் நீண்ட தாமதத்திற்குப் பின்னரே அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வருகிறது. இதனிடையே மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிகள் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக தலைமை
இருப்பினும், பாஜக தலைமை அமைச்சருக்கு ஆதரவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகனின் செயலுக்காகத் தந்தை தண்டிக்க முடியாது என்பதே தலைமையின் முடிவாக உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, தற்போதைய சூழலில் அமைச்சர் அஜய் மிஸ்ராவை அமைச்சரவையில் இருந்து நீக்க வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. சிறப்புக் குழு தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்பதால் பாஜக இதில் அவசரம் காட்ட விரும்பவில்லை.
அறிவுறுத்தல்
அதேநேரம் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் அமைச்சர் அஜய் மிஸ்ரா கோபத்தை வெளிப்படுத்தி, திட்டியது சர்ச்சையானது. இனி வரும் காலங்களில் பொது இடங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும்படி அமைச்சருக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாஜகவின் இந்த நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சிறப்பு விசாரணைக் குழு
முன்னதாக, சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகின. விவசாயிகள் கொல்லப்பட்டது திட்டமிட்ட சதி என்றும் சிறப்பு விசாரணைக் குழு கூறியதிலிருந்து அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா மீது ஏற்கனவே உள்ள பதிவு செய்யப்பட்ட பிரிவுகளுடன் கொலை செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்ய சிறப்பு விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.