இந்தியாவில் லாக்டவுன் தேவையில்லை.. ஏன் தெரியுமா?.. மத்திய அமைச்சர் பேட்டி!
டெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கிறது. அதுவும் இந்தியாவில் கொரோனா 3-வது அலை இருந்து வருகிறது. அதுவும் ஓமிக்ரான் வைரஸ் வந்த நாளில் இருந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் றெக்கை கட்டி பறந்து வருகிறது.
நாளுக்கு நாள் பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. தலைநகர் டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

கொரோனாவின் ஆதிக்கம்
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3,37,704 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. 488 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,42,676 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 21,13,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாக்டவுன் தேவையில்லை
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தொற்றின் வேகம் மிக அதிகமாக உள்ளதால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்படுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்தது. ஆனால் ஊரடங்கு குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் லாக்டவுன் தேவையில்லை என்று மத்திய அமைச்சர் சோபனா கரண்ஜலே கூறியுள்ளார்.

கொரோனாவுடன் வாழ்ந்து வருகிறோம்
இது தொடர்பாக நிருபர்களிடம் கூறிய அவர், ' கடந்த சில மாதங்களாக கொரோனாவுடன் வாழ்ந்து வருகிறோம். இப்போது நாம் கொரோனா வைரஸுடன் வாழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. . ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. மக்கள் மாஸ்க் அணிதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் ஊரடங்கு தேவையில்லை' என்று தெரிவித்துள்ளார்.

வாழ்வாதாரம் பாதிப்பு
மத்திய அமைச்சர் கூறியபடி கடந்த வருடங்களில் போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பலரும் வேலை இழந்தனர். இதனால்தான் இந்த முறை முழு ஊரடங்குக்கு மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் வார இறுதி நாள் ஊரடங்கு போடப்பட்டு இருந்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கிறது என்று வியாபாரிகள், வர்த்தகர்கள் கருதியதால் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications